Also Watch
Read this
By: Fyrose Banu

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக வழங்கப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து, பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை ராஜ்குமார் தட்சிணாமூர்த்தி துரைராஜா–துரைராணி அறக்கட்டளை மூலம் கோயில்களுக்கு வழங்கப்பட்ட இந்த நிலம் தொடர்பாக, கோயில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் பேரில் முன்னாள் தாசில்தார் அன்பழகன், முன்னாள் வி.ஏ.ஓ. அரசன், சார்பதிவாளர்கள் பிரகாஷ், அனந்தராமன் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலி ஆவணங்களை தாக்கல் செய்து பட்டா பெற்றதாக கூறப்படும் இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட முன்னாள் தாசில்தார் அன்பழகன், முன்னாள் வி.ஏ.ஓ. அரசன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த நிலையில், அவரை பணியிடைநீக்கம் செய்து வருவாய் நிர்வாகத்துறை கமிஷனர் முருகானந்தம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் முன்னாள் சார் பதிவாளர் ஆனந்த ராமனை மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதன் மூலம் மீனாட்சி கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved