Also Watch
Read this
போலீசாரின் கஸ்டடியில் இருக்கும் போது மர்மமான முறையில் உயிரிழந்த மானாமதுரையைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் டெலிசனின் மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

குற்றப்பத்திரிகை, கொடூரம்...
மானாமதுரை ஆகாஷின் மரண வழக்கில் வெளியாகி இருக்கும் குற்றப்பத்திரிகையை படிக்கும் போதே நெஞ்சம் பதைபதைக்கிறது. பாலத்தின் மேல் இருந்து கீழே குதித்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக சித்தரிக்கப்பட்ட கதையை சுக்குநூறாக்கி போலீசாரின் குரூர குணத்தை தோலுரித்து காட்டியிருக்கிறது இந்த குற்றப்பத்திரிகை.

26 வயதான இளைஞர்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிஷன். 26 வயதான இவரை கொ* முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்து போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இருநாளிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. போலீசார் தன்னை கடுமையாக தாக்கியதாக ஆகாஷ் தனது மரணத்திற்கு முன் அளித்திருந்த வாக்குமூலமும் வெளியாகி அவரது உறவினர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சிபிசிஐடி குற்றப்பத்திரிகை
தொடர் போராட்டங்கள், அரசியல் தலைவர்களின் கண்டனம், கட்சிகளின் ஆர்ப்பாட்டம் என அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படவே வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் 100 நாட்களை கடந்தும் ஆகாஷின் உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அரசே தகனம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில், மொத்தம் 16 காவலர்கள் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளை அடுக்கிய சூழலில், திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், உதவி ஆய்வாளர் குகன், காவலர்கள் காளீஸ்வரன், பழனி, தெய்வேந்திரன், மகேந்திரன் ஆகிய 6 பேர் மீது மட்டும் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையை கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி தாக்கல் செய்திருந்தனர்.

வெளியான தகவல்கள்
சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகலை கேட்டு ஆகாஷ் டெலிசனின் பெற்றோர் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு அந்த அறிக்கையின் ஒரு பகுதி மட்டும் வந்து சேர்ந்திருக்கிறது. அதில் உள்ள தகவல்கள் ஒவ்வொன்றும் உறைய வைக்கிறது.

அதாவது, ஆகாஷின் மீதான குற்றப் பின்னணிகளை ஆராய்ந்த போலீசார் இந்த முறை காலை உடைத்தே ஆக வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஆகாஷுடன் கைது செய்யப்பட்ட குணா என்ற நபரை மட்டும் ஸ்டேஷனில் வைத்திருந்த போலீசார், ஆகாஷை அடிப்பதற்காக லொகேஷனை தேர்ந்தெடுக்க காவல் ஆய்வாளர் திலீபன் சார்பு ஆய்வாளர் குகனிடம் கூறியுள்ளார். அதன்படியே காவலர்கள் இருவரும் யூகலிப்டஸ் காடு அமைந்துள்ள புறம்போக்கு இடத்தை தேர்வு செய்து இரும்பு ராடு ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருந்திருக்கின்றனர்.

கொடூர தாக்குதல்
இதன் பிறகாகவே ஆகாஷின் கண்ணை கட்டி விட்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற போலீசார், முழங்காலுக்கு கிழேயும் கணுக்காலுக்கு மேலேயும் ஓங்கி ஓங்கி அடித்துள்ளனர். எலும்பு வெளியே தெரிந்ததால் கமுக்கமாக போலீஸ் வாகனத்திற்கு அழைத்துச் சென்ற காவலர்கள், நீதிபதி கேட்டால், பாலத்திலிருந்து கீழே குதித்ததாக சொல்ல வேண்டும் என மிரட்டி உள்ளனர்.

அடுத்த கட்ட நடவடிக்கை
இந்த கொடூர தாக்குதலின் போது தான் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆகாஷ் பலியானதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குரூர தாக்குதல் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் காவலர்கள் 6 பேர் மீதும் BNS 103, 201, 238 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகாஷ் டெலிசன் மரணம் தொடர்பான சிபிசிஐடி குற்றப்பத்திரிகை வெளியாகி இருக்கும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர்கள் மீது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved