Also Watch
Read this
By: Fyrose Banu

பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்தின் படியில் பயணிகள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கி இயக்கப்பட்ட தனியார் பேருந்து ஒன்று ஓமலூர் அருகே பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் படிக்கட்டுகளில் பயணிகள் சிலர் விபத்து குறித்த எந்தவித அச்சமும் இன்றி, ஆபத்தான முறையில் தொங்கியபடியே பயணம் செய்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்லும் சூழலில், படியில் தொங்கியபடி பயணிப்பது பெரிய அளவிலான விபத்துகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், இதுகுறித்து பேருந்தின் ஓட்டுநரோ அல்லது நடத்துநரோ பயணிகளுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கவில்லை. மேலும், படியில் பயணிகள் தொங்குவதைப் பொருட்படுத்தாமல் ஓட்டுநர் பேருந்தை தொடர்ந்து அதிவேகமாக இயக்கியுள்ளார்.
நெடுஞ்சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் சிலர் இந்த ஆபத்தான பயணத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஆபத்தான பயணங்களைத் தவிர்க்கும் வகையில், போக்குவரத்து காவல்துறையினரும் அதிகாரிகளும் உடனடியாகச் தலையிட்டு, சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து நிர்வாகம் மற்றும் ஓட்டுநர், நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved