Also Watch
Read this
By: Fyrose Banu

அம்பத்தூர் வரதராஜபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயதான கோபாலகிருஷ்ணன், தனது மனைவி 60 வயதான ராஜேஸ்வரியுடன் வசித்து வருகிறார். கோபாலகிருஷ்ணன் வீட்டின் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் வழக்கம்போல் கடைக்குச் சென்ற நிலையில், வீட்டில் இருந்த ராஜேஸ்வரி துணிகளை உலர வைப்பதற்காக மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்ட பெண் ஒருவர், அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து, பீரோவில் இருந்த ரூ.8 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

சிறிது நேரத்தில் மொட்டை மாடியில் இருந்து கீழே வந்த ராஜேஸ்வரி, குடியிருப்பில் இருந்து அவசரமாக வெளியேற முயன்ற பெண்ணை பார்த்து, யார் நீங்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண், குடியிருப்பில் உள்ளவர்களிடம் மருத்துவ முகாம் தொடர்பாக தகவல் தெரிவித்துவிட்டதாகக் கூறிவிட்டு அங்கிருந்து அவசரமாக வெளியேறியுள்ளார். பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ராஜேஸ்வரி, உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது,பீரோ திறந்து கிடந்ததுடன் அதில் வைத்திருந்த ரூ.8 லட்சம் பணம் மாயமானது தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜேஸ்வரி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், மருத்துவ முகாம் நடைபெறுவதாகக் கூறி வீடு வீடாகச் சென்று, வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை நோட்டமிட்டு, ஆளில்லாத வீடுகளை குறிவைத்து அந்தப் பெண் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்தப் பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இதுபோன்று சந்தேகத்திற்கிடமான முறையில் வீடு வீடாகச் சென்று தகவல் தெரிவிக்கும் நபர்களை பொதுமக்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான பெண் அல்லது நபர்களை பார்த்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved