Also Watch
Read this
Posted on: Mar 17, 2026 10:40 AM
By: Fyrose Banu

மேலூரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.02 லட்சம் பறிமுதல் செய்யபட்ட நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்களுடன் பணம் உள்ளிட்ட பொருட்களை கொண்டுச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பறக்கும் படையினர் வாகன தணிக்கை
மேலூர் பகுதியில் தேர்தல் காலத்தை முன்னிட்டு தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதால், பணம் மற்றும் பொருட்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் இணைந்து பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை நடத்தி வருகின்றனர்.
உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4 லட்சம்
இந்நிலையில், மேலூர்-கொட்டாம்பட்டி அருகே பாண்டாங்குடி பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் வஞ்சிநகரம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (44) என்பவரிடம் இருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்து 410 பணம் எடுத்துச் செல்லப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது.
தேர்தல் விதிமுறைகளின் படி பணம் பறிமுதல்
தொடர்ந்து, இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, அந்த பணம் கோழி இறைச்சி விற்பனை மூலம் கிடைத்த தொகை என்றும், அதை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துச் சென்றதாக விஸ்வநாதன் விளக்கம் அளித்ததாக கூறப்படும் நிலையில், பணத்தை எடுத்துச் செல்ல தேவையான உரிய ஆவணங்கள் இல்லாததால், தேர்தல் விதிமுறைகளின்படி அந்த தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாவட்ட கருவூலத்தில் ஒப்படைப்பு
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்து 410 பணத்தை அதிகாரிகள் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர். அதனை மேலூர் வட்டாட்சியர் முத்துப்பாண்டி ஆய்வு செய்து, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஒரே நாளில் ரூ.11 லட்சம் பறிமுதல்
மேலும் நேற்று மட்டும் ஒரே நாளில் மேலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனைகளில் மொத்தம் ரூ.11 லட்சத்து 29 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தேர்தலை முன்னிட்டு மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி பணம் அல்லது மதிப்புள்ள பொருட்கள் எடுத்துச் செல்லப்படுமானால் அவை பறிமுதல் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved