Also Watch
Read this
தூத்துக்குடி அருகே வழக்கமாக மாதம் ஆயிரத்து 200 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் கட்டி வந்த குடும்பத்திற்கு, கடந்த முறை வீடு பூட்டியிருந்ததை காரணம் காட்டி, 4 மாத கட்டணத்தையும் ஒன்றாக்கி, 10 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டும் என்று, மின்சார வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அக்குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மின்வாரியம் நோட்டீஸ்...
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் ராஜா. வழக்கமாக, இவரது வீட்டிற்கு மாதந்தோறும் 900 முதல் ஆயிரத்து 200 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் வருவது வழக்கம். ஆனால், இந்த முறை வந்த கரண்ட் பில் தொகையை பார்த்து ராஜாவின் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. எப்போதும் வரும் தொகையை விட பல மடங்கு அதிகமாக, 9 ஆயிரத்து 563 ரூபாய் கட்ட வேண்டும் என மின்சார வாரியம் நோட்டீஸ் அனுப்பியது தான் இந்த விவகாரத்தின் தொடக்க புள்ளி.

குறுஞ்செய்தியில் வந்த அதிர்ச்சி
கடந்த முறை மின் கணக்கீடு செய்ய ஊழியர் வந்தபோது, ராஜா வீடு பூட்டி இருந்து உள்ளது. இதனால், முந்தைய மாதக் கட்டணமான 949 ரூபாயை செலுத்தியிருக்கிறார் ராஜா. ஆனால், இந்த முறை கணக்கீடு செய்த அதிகாரிகள், கடந்த முறை வீடு பூட்டியிருந்ததால், இது 4 மாதங்களுக்கான மொத்த கட்டணம் என்றும், எனவே முழுத் தொகையையும் கட்டியே தீர வேண்டும் என்று கறாராக கூறியதாக சொல்லப்படுகிறது. இங்குதான் மின்சார வாரியத்தின் முதல் அலட்சிய ஆட்டம் தொடங்கியிருக்கிறது. மின் கணக்கீட்டாளர் வீட்டிற்கு வந்து அட்டையில் தேதி மட்டுமே போட்டுவிட்டு சென்றதாகவும், யூனிட் விவரங்களை எழுதவே இல்லை என்றும் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், ராஜாவுக்கு குறுஞ்செய்தியில் மட்டும் 9 ஆயிரத்து 463 ரூபாய் கட்ட வேண்டும் என்று தொகையை அனுப்பியிருக்கின்றனர்.

முதல்வரின் தனிப்பிரிவுக்கு...
அதிர்ச்சி அடைந்த ராஜா, உடனடியாக மின்வாரியத்தின் உயர் அதிகாரிகளுக்கும், நேராக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பி உள்ளார். புகாரை பரிசீலித்த முதல்வர் தனிப்பிரிவு 949 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என்று ராஜாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது. ஆனால், அங்கேதான் மின்வாரிய அதிகாரிகளின் அதிகார தோரணை எகிறியிருக்கிறது. முதல்வர் தனிப்பிரிவு கொடுத்தது குளறுபடியான கணக்கு, அவங்களுக்கு என்ன தெரியும்? நாங்கள் கொடுத்தது தான் சரியான கணக்கு, முழுப் பணத்தையும் கட்டியே ஆகணும் என்று முதல்வரி தனிப்பிரிவின் பதிலையே தூக்கியெறிந்து பேசியிருக்கின்றனர் உள்ளூர் அதிகாரிகள்.

கரண்ட் கட்
பிள்ளைகளின் பள்ளி கட்டணம் செலுத்திய நெருக்கடியில் இருந்த ராஜா, இப்போது உடனடியாக இவ்வளவு பணம் செலுத்த முடியாது, வட்டிக்கு பணம் கேட்டிருக்கிறேன், வந்ததும் கட்டிவிடுகிறேன், சிறிது கால அவகாசம் கொடுங்கள் எனக் கெஞ்சியுள்ளார். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்காத அதிகாரிகள், கடந்த 10ஆ தேதி மின்கம்பத்தில் இருந்தே ராஜா வீட்டிற்கான மின் இணைப்பை துண்டித்து எறிந்தனர். கடந்த 4 நாட்களாக தனது குடும்பம் இருட்டில், விஷப்பூச்சிகளின் பயத்திற்கு இடையே குழந்தைகள் தெரு விளக்கின் அடியில் உட்கார்ந்து படிக்கும் அவலநிலை ஏற்பட்டிருப்பதாக, ராஜா வேதனை தெரிவித்திருக்கிறார்.

நியாயப்படுத்திய மின்வாரியம்
இந்த விவகாரம் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர் வீட்டில் ஏசி எல்லாம் வைத்திருக்கிறார் எனவும், இது 4 மாதங்களாக பயன்படுத்திய மின்சாரத்திற்கான கட்டணம்தான் என்றும் கூறியுள்ளனர். முதல்வர் தனிப்பிரிவில் இருந்து தவறுதலாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், அவருக்கு 4 நாட்கள் அவகாசம் கொடுத்தும் பணம் கட்டாததால் தான் மின் இணைப்பை துண்டித்தோம் என்று தங்களின் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றனர்.

கொந்தளிப்பு...
முதல்வர் தனிப்பிரிவு கொடுத்த பதிலுக்கே குளறுபடி என்று மின்வாரிய அதிகாரிகள் முத்திரை குத்துவது எந்த விதத்தில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். வீடென இருந்தால் ஏசி இருப்பது இயல்புதான், அதற்காக மக்களின் நியாயமான கால அவகாச கோரிக்கையை கூட மதிக்காமல், குழந்தைகளின் படிப்பை தெரு விளக்கிற்கு தள்ளிய அதிகாரிகளின் இந்த இரக்கமற்ற போக்கு மக்களிடையே கொந்தளிப்பைதான் ஏற்படுத்தியிருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved