Also Watch
Read this
By: Fyrose Banu

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள கல்லுக்குழி பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்ட மதுபாட்டிலுக்குள் ஸ்டிக்கர் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிணத்துக்கடவு, கல்லுக்குழி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை எண் 1878-ல் மதுப்பிரியர் ஒருவர் 'Black Pearl XXX Rum' குவாட்டர் பாட்டில் ஒன்றை வாங்கி உள்ளார். பாட்டிலைத் திறந்து குடிக்க முயன்ற போது, சீல் வைக்கப்பட்ட அந்த மதுபாட்டிலின் உள்ளே பாட்டிலின் வெளிப்புறம் ஒட்டப்படும் ஸ்டிக்கர் மிதப்பதைக் கண்டு அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். சீல் வைக்கப்பட்ட மதுபாட்டிலுக்குள் வெளி ஸ்டிக்கர் எப்படிச் சென்றது என அதிர்ச்சி அடைந்த அவர், அதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அரசு டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் தரம் மற்றும் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும் மதுபான தயாரிப்பு ஆலைகளில் முறையான தரப்பரிசோதனை செய்யப்படுகிறதா ?" என பலரும் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் நடைபெற்ற கிணத்துக்கடவு தொகுதி, தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அவர்களின் சொந்தச் சட்டமன்றத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட மதுபான ஆலை மற்றும் டாஸ்மாக் கடை மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் மது பிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved