Also Watch
Read this
’அமைச்சர் நிர்மல்குமார் குறித்த ஆ.ராசாவின் பேச்சை மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கண்டிக்க வேண்டும்,’ என, விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

மதுரையில் திருமாவளவன்...
மதுரை அவனியாபுரத்தில் மலைச்சாமி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது;
தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி சார்பில் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி களப்பணி ஆற்ற உள்ளது.

இடதுசாரிகள் முடிவு
இடதுசாதிகள் எடுத்திருக்கும் முடிவு அவர்களுடைய அரசியல் உரிமை, அரசியல் சுதந்திரம். தனித்து அவர்கள் போட்டியிடுகிறார்கள் என்றாலும் கூட தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தொடர்வதற்கு அவர்களின் ஆதரவு நீடிக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால் அது தமிழக வெற்றி கழகத்திற்கு எதிரான நிலைப்பாடு இல்லை.

படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு, விடுதலை சிறுத்தைகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம்
திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாகரிக வரம்புகளை மீறி, மிகக் கடுமையாக முதலமைச்சரையும் அவருடைய பொறுப்பையும் மாண்பையும் மீறி, ஒருமையில் வசைபாடி இருப்பதும், அமைச்சர் நிர்மல் குமார் குறித்து பேசும்போது,மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, தாயை அவமதிக்கும் வகையில், மிக இழிவான சொற்களால் வசைபாடி இருப்பது அதிர்ச்சி தருகிறது. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. இழி சொற்களால் அரசியல் எதிரிகளை விமர்சிப்பது கவலை அளிக்கிறது.

இது தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக போகும் என்பதை விட திமுகவுக்கு எதிராக மக்களிடத்தில் கருத்து பதிவாகும் என்பதை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அறிவுறுத்துகிறேன், அவர் வெளிப்படையாக இந்த போக்கை
கண்டிக்க வேண்டும்.

மீனாட்சி அம்மன் கோவிலில்...
மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணி நிறைவு பெற்று குடமுழுக்கு நடைபெற உள்ள சூழலில், அங்கே தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. இதை புறந்தள்ளாமல், தமிழ் மக்களால் நிறுவப்பட்டு, புதுப்பிக்க பெற்று வழிபாடு செய்யப்பட்டு வருகிற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் ஒலிக்க வேண்டும். தமிழில் குடமுழுக்கு செய்வதற்கு அரசு ஆணையிட வேண்டும். அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும்
ஐந்தொழில் சமூகத்தை சார்ந்த, விஸ்வகர்மா குலத்தை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று, வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள். அனைத்து நிலைகளிலும் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. கதவு முதல் தாழ்ப்பாள் வரை அனைத்திலும் அவர்கள் பங்கு இருக்கும் சூழலில் அவர்களை கோவிலுக்கு அனுமதிக்க முடியாது என்பது ஏற்படயதல்ல. அவர்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கவேண்டும் என
கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் கருத்து
விவசாய நிலத்தை, வகை மாற்றம் செய்யும் போது மக்கள் கருத்தை கேட்பது அவசியமானது. மக்களின் உணர்வுகளுக்கு மாறாக வகை மாற்றம் செய்யப்பட்டால், அது தவிர்க்கப்பட வேண்டும் என விசிக வேண்டுகோள் விடுக்கிறது.

உணர்வுகளை மதித்து...
தலைமை செயலகம் கட்டுவதற்கு 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. அந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீனவ மக்கள் மற்றும் பொதுமக்கள் அந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். உணர்வுகளை மதித்து அதற்கு ஏற்ப அரசு முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved