Also Watch
Read this
By: Fyrose Banu

தேவாரப் பாடல் பெற்ற 61-ஆவது திருத்தலமும், திருநாவுக்கரசருக்குச் சிவபெருமான் திருக்கட்டமுது அளித்து காட்சியளித்த அற்புதத் தலமுமான திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்ஞீலி அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவிலில் ஆடிப்பூரத் திருத்தேர் பெருந்திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
எமதர்மராஜனுக்கு இழந்த பதவியையும் அதிகாரத்தையும் சிவபெருமான் மீண்டும் வழங்கிய தலமாகவும், தேவலோக சப்த கன்னியர் கல்வாழைகளாக அவதரித்து பக்தர்களின் சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் தலமாகவும் திகழும் கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த இக்கோவிலில், ஆடிப்பூரத் திருத்தேர் பெருந்திருவிழா கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, மலர் அலங்காரத்தில் அருள்மிகு விசாலாட்சி அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார்.
அதனைத் தொடர்ந்து மாலை 3:26 மணியளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு, மாலை 5:00 மணியளவில் தேர் நிலையை அடைந்தது. இவ்விழாவில் திருச்சியைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, அரஹரா கோஷத்துடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved