Also Watch
Read this
By: Web Team

கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள தவெக தலைவர் விஜய், நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சினிமா காட்சியை சுட்டிக் காட்டி விமர்சித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:
என் நெஞ்சில் குடியிருக்கும், உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
லாரி தொழில் தொடங்கி, பல தொழில்களை கொண்ட மாவட்டம் நாமக்கல். முட்டை உலகமும், இங்கே மிகவும் பிரபலம். எக் சிட்டி என்றும் கூறுவார்கள். தமிழ்நாடு மக்களுக்கு சத்தான முட்டை கொடுக்கும்.
உணவு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்ச்சி ஊட்டும் மக்களும் நாமக்கல் மக்கள் தான். ’தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற நாடி நரம்புகளுக்கு ரத்தம் பாய்ச்சும் வரிகளை எழுதியவர் யார் தெரியுமா?
விஜயகாந்த் சொன்னாரு, அண்ணன் கேப்டன் அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் சேர்த்து சொன்னவர் யார் தெரியுமா? நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தான்.

தமிழ்நாட்டு மக்களுக்கு இட ஒதுக்கீடு உரிமையாக வழங்கியதும் இதே நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செங்கோடு பகுதியில் இருக்கும் ஒருவர் தான். அவர் வேறு யாருமில்லை சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சுப்புராயன்.
இட ஒதுக்கீடு வழங்கியதில், இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமை வழங்கியவர் இவர் தான். நாமக்கலில் இவருக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்களே, செய்தார்களா?

ஒரு படத்தில் வடிவேலு காலியான பாக்கெட்டை எடுத்து காட்டுவாரே, அப்படி தான். ஒவ்வொரு வாக்குறுதியையும் படித்து காலி பாக்கெட்டை காட்ட வேண்டியது தான்.

அதை செய்வோம், இதை செய்வோம் என்று சொன்னார்களே அதன் பட்டியலை பார்ப்போம். ஒவ்வொரு ஒன்றியத்திலும், தானிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும், இவை உலர் கலன்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும் என வாக்குறுதி நம்பர் 50ல் சொன்னார்கள்.
கொப்பரை தேங்காயை தமிழக அரசே கொள்முதல் செய்யும், அதிலிருந்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி நம்பர் 66ல் சொன்னார்கள்.

ரேஷன் கடைகளில், நாட்டுச் சர்க்கரை, வெல்லம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி நம்பர் 68.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள்,
சொன்னார்களே, செய்தார்களா? நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, முட்டை சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உண்டு. அதை இதுவரை ஆண்ட கட்சிகளும், ஆளும் கட்சிகளும் யோசிக்கவே இல்லை.
திமுக எம்எல்ஏக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு நாடறிந்த விஷயம். அதில் நாமக்கலை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை விசைத்தறி பெண்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர்.
நம் ஆட்சி அமைந்ததும், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இந்த கிட்னி திருட்டுக்கு ஆரம்பம் கந்துவட்டியில் தொடங்கியது. விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்ததாதால் தான் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விஜய் கேள்வியா கேட்கிறார்.. இவர் வந்தால் என்ன செய்வார் என கேள்வி கேட்கிறார்கள்.
கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், பெண்கள் பாதுகாப்பு, அடிப்படை சாலை வசதி, மின்சாரம், சட்டம்-ஒழுங்கு போன்ற விஷயங்களை சமரசம் இல்லாமல் செய்துகாட்டுவோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ அதை தான் செய்வோம்.
இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved