Also Watch
Read this
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 21 பேர், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையால் துரிதமாக மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். இயற்கையின் கோர தாண்டவத்தை கண் முன் பார்த்தவர்கள், நல்வாய்ப்பாக உயிர் தப்பியிருந்தாலும், அந்த கொடூர அனுபவத்தை எப்படி மறக்கப் போகிறோம் என தெரியவில்லை என்று புலம்பியுள்ளனர்.
நூலிழையில் தப்பிய தமிழர்கள்
சுனாமி பேரலையே கல்லும், மண்ணும் கலந்து வழியில் கிடப்பவற்றை எல்லாம் வாரிசுருட்டியபடி வந்தால் எப்படி இருக்குமோ, நேபாள பெருவெள்ளம் அப்படி இருந்ததாக தெரிவித்துள்ளனர் அந்த பேரழிவில் இருந்து நூலிழையில் தப்பிய தமிழர்கள்.

ஆன்மீக யாத்திரையில்...
கைலாச மான்சரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்று அங்கு ஏற்பட்ட அதிபயங்கர வெள்ளத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த 21 பேர், பத்திரமாக மீட்கப்பட்டு சென்னை திரும்பினர். சென்னையை சேர்ந்த 5 பேர், கடலூரை சேர்ந்த 9 பேர், மயிலாடுதுறையை சேர்ந்த மூவர், திருச்சியை சேர்ந்த 3 பெண்கள், கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவர் என மீட்கப்பட்ட 21 பேர், காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கும், அங்கிருந்து சென்னைக்கும் அழைத்து வரப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் சரத்குமார் ஆகியோர் அவர்களை நேரில் வரவேற்றனர்.

மத்திய, மாநில அரசுக்கு நன்றி
புனித யாத்திரை சென்ற இடத்தில் பெரும் அபாயத்தில் சிக்கி நல்வாய்ப்பாக தப்பி வந்தவர்களை, அவர்களது உறவினர்கள் ஆரத்தழுவி வரவேற்று நிம்மதி பெருமூச்சு விட்டதோடு, மீட்டு அழைத்து வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

அதே போல் பேரிடரில் இருந்து தப்பி, பெரும் போராட்டத்துக்கு நடுவே உயிரை கையில் பிடித்து வைத்திருந்தவர்கள், சொந்த மண்ணில் மீண்டும் கால் வைப்போமா? என்ற நம்பிக்கையே இல்லாமல் இருந்ததாக கூறியதோடு, தங்களை மீட்டு தாயகம் அழைத்து வந்த மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
பெரு வெள்ளத்தில் சிக்கிய அனுபவத்தை அதிர்ச்சி அகலாமல் விவரித்த காஞ்சிபுரத்தை சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரான சத்யா என்பவர், முதலில் ஏதோ புழுதி கிளம்புவதாக நினைத்ததாகவும், பின்னர் தான் பேரிரைச்சலோடு சுனாமி போல் பொங்கி வந்த வெள்ளத்தை பார்த்ததாகவும் பீதியோடு தெரிவித்தார்.

சபாஷ் பெற்ற மயிலாடுதுறை பூங்குழலி
பேருந்தில் இருந்து குதித்து புற்களையும், முள்செடிகளையும் பிடித்துக் கொண்டு செங்குத்தான மலை மீது ஏறி உயிர் தப்பியதாக கூறிய அவர், உடன் வந்த பெண் ஒருவர் உடுத்தியிருந்த சேலையை கழற்றி வீசி, ஒவ்வொருவராக மேலே ஏறி தப்பிக்க உதவியதாக தெரிவித்தார்.

தலைமை செயலகத்தில் பணிபுரியும் தனது தங்கை மூலம் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் தகவல் தெரிவித்ததால், உடனடியாக உதவி கிடைத்ததாகவும் சத்யா தெரிவித்தார். மலைமீது ஏற தானே மிகவும் சிரமப்பட்டதால், ஏற முடியாமல் தவித்த மற்றவர்களை காப்பாற்றவே, சேலையை கழற்றி கொடுத்ததாக கூறி உயர்ந்து நின்றார் மயிலாடுதுறையை சேர்ந்த பூங்குழலி.

அனைவரும் வருவார்கள்...
சிவபெருமான் தான் தங்களை காப்பாற்றியதாக தெரிவித்த திருச்சியைச் சேர்ந்த சிவரஞ்சனி, நேபாள அரசும், நேபாள ராணுவத்தினரும் தங்களுக்கு தேவையான உதவிகளை செய்ததாகவும், இந்திய தூதரக அதிகாரிகளும் தொடர்பு கொண்டு மீட்டதாகவும் கூறினார்.




நேபாளத்தில் சிக்கி உள்ள மற்ற தமிழர்களை மீட்கும் பணிகளில், தமிழ்நாடு அமைச்சர்கள் குழு தீவிரமாக செயலாற்றி வருவதாக கூறிய அமைச்சர் என்.ஆனந்த், அனைவரும் நல்லபடியாக மீட்டு அழைத்து வரப்படுவார்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved