Also Watch
Read this
மதுரையின் அரசியாக, பாண்டி மாதேவியாக வீற்றிருக்கும் மீனாட்சி அம்மன் கோவில் மகா குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிகக் கோலாகலமாக நடைபெற்றது. சுவாமி மற்றும் அம்மனின் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்ட போது வரலாற்றுச் சிறப்புமிக்க மாசி வீதிகளில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் "மீனாட்சி சோமசுந்தரா" முழக்கம், வைகை நதிக்கரையைத் தாண்டி விண்ணை அதிரச் செய்தது.

தள்ளிப்போன குடமுழுக்கு
ஆகம விதிகளின்படி, இந்து சமயக் கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பது விதி. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டே அடுத்த குடமுழுக்கு விழா நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் வரலாற்றுச் சிறப்புமிக்க வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குடமுழுக்கு தள்ளிப்போனது. இதையடுத்து 67.58 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் நடந்து முடிந்த நிலையில் 17ஆம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

கடந்த 11ஆம் தேதி முதல்...
குடமுழுக்கு விழாவையொட்டி வடக்காடி வீதியில் 184 குண்டங்கள் மற்றும் 56 யாகசாலைகள் அமைக்கப்பட்டு விநாயகர் வழிபாட்டுடன் கடந்த 11ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. கங்கை உள்ளிட்ட பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், 12 கால யாகசாலை வேள்விகளில் வைத்து பூஜிக்கப்பட்டது.

கண் கொள்ளாக்காட்சி...
குடமுழுக்கு விழாவையொட்டி ஒட்டுமொத்த மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்க, கோபுரங்கள் 5 லட்சம் டன் வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் புதுப் பொலிவுடன் ஜொலிக்க, கோவில் முழுவதும் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஐந்து லட்சம் டன் மலர்களின் நறுமணமும், லேசர் விளக்குகளின் நல்ஒளியும், அன்னை மீனாட்சியின் அருள் ஒளியோடு இணைந்து கண்கொள்ளாக் காட்சியாக ஜொலித்தது.

உலகத் தமிழர்களின்...
யாகசாலையிலிருந்து புனித கலசங்கள் புறப்படாகி, அன்னை மீனாட்சியின் ராஜ கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களை சென்றடைய, மங்கள வாத்தியங்களின் இசையும், தமிழ் மறை மந்திரங்களும் ஒலிக்க, கோவிலின் ராஜ கோபுரங்கள் உட்பட 12 கோபுரத்தில் உள்ள தங்க விமானங்களுக்கு சமகாலத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு மகா வைபவமாய் அரங்கேறியது. முதலில் அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சிக்கும், அதனை தொடர்ந்து மூலவர் சொக்கநாதப் பெருமானுக்கும் என, முறைப்படி நடைபெற்ற குடமுழுக்கு விழா மதுரையைத் தாண்டியும் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.

பக்தர்களின் பக்தி கோஷம்
மாசி வீதிகளில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டபோது, "மீனாட்சி சோமசுந்தரா" என்ற பக்தர்களின் கோஷம் விண்ணைத் தொட்டது. கூட்ட நெரிசலைக் தவிர்க்கும் பொருட்டு, நகரின் முக்கிய சந்திப்புகளில் 51 பிரம்மாண்ட எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நேரலை செய்யப்பட்டது.

இலவச தரிசனம்
பக்தர்களின் வசதிக்காகக் கட்டண தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, 4 நாட்களுக்கு முற்றிலும் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவையொட்டி AI உடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 6 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தமிழர்களின் மறுமலர்ச்சி
அமைச்சர்கள் ரமேஷ், நிர்மல் குமார் உள்ளிட்டடோர் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டு, குடமுழுக்கை விழாவை சிறப்பாக நடத்தினர். மதுரையின் அரசியாக வீற்றிருக்கும் மீனாட்சி அம்மனின் மகா குடமுழுக்கு விழா, வெறும் ஆன்மீக நிகழ்வாக மட்டுமில்லாமல், தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பாரம்பரியத்தின் மறுமலர்ச்சியாகவும் திகழ்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved