Also Watch
Read this
முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில் உங்கள் இஷ்டத்திற்கெல்லாம் எதையும் நீக்க முடியாது என பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அமளியை நிறுத்தாத திமுகவினரை அவை காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்த, முதலமைச்சரிடம் பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப்பாக்குக்கு பதில் சொல்வதாக எ.வ.வேலு விமர்சனம் செய்தார்.

சட்டப்பேரவையில் கடைசி நாளில்...
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் வினாக்கள்-விடைகள் நேரம் கிடையாது, 8 துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று, அமைச்சர்கள் பதிலுரை அளிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவை தொடங்கியதும் பேசிய எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு, காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் விஜயின் பதிலுரையே வெறும் குற்றச்சாட்டுகள் தான் எனக்கூறினார்.

எ.வ.வேலு குற்றச்சாட்டு
மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ED வழக்கு குறித்து ஒரு முதலமைச்சர் அவையில் பேசலாமா? கருணாநிதி மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என சர்க்காரியா கமிஷனே கூறிவிட்டபோது ஏன் பேச வேண்டும்? என கேள்வி எழுப்பினார் எ.வ.வேலு. அதேபோல், மாறன் குடும்பத்திற்கு வேண்டிய நபரான முதலமைச்சர் விஜய், அவரை பற்றி பேசலாமா? எனக்கூறிய எ.வ.வேலு, ஆதாரமின்றி முதலமைச்சர் விஜய் பேசிய சர்க்காரியா கமிஷன், மிசா உள்ளிட்ட கருத்துக்களை எல்லாம் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார்.

அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எங்கு எங்கெல்லாம் பணம் வாங்கினார் என சர்க்காரியா கமிஷன் கூறியுள்ளது, அவர் மீதான 6 குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளது, சிபிஐ வழக்கும் உள்ளது எனக்கூறியதோடு ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டார் என்பதற்கான எந்த குறிப்பும் இல்லை, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அவதூறாக பேசியதால் தான் அவர் கைது செய்யப்பட்டார் எனக் கூறினார்.

திமுக கொந்தளிப்பு, அமைச்சரை கண்டித்த சபாநாயகர்
இவரது இந்த பேச்சால் கொந்தளித்த திமுகவினர், கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். அப்போது எழுந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவினர் பேசினால் நாங்கள் கேட்க வேண்டும், ஆனால் நாங்கள் பேசினால் அவர்கள் கேட்கமாட்டார்கள், அவர்களை போன்று நாங்களும் எழுந்து நிற்கவா? எனக்கேட்க, சட்டென கோபப்பட்ட சபாநாயகர் இப்படி பேசுவது மிகவும் தவறு என கண்டித்தார்.

கே.என்.நேரு vs செங்கோட்டையன்
இதனிடையே, அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கே.என்.நேரு விடாமல் கோரிக்கை வைக்க, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது இதே அவையில் சர்க்காரியா கமிஷன் பற்றி பேசப்பட்டுள்ளது, அதனால் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய தேவை இல்லையென அவை முன்னவர் செங்கோட்டையன் கூறினார்.

சபாநாயகர் திட்டவட்டம்
இப்படி, திமுகவினர் முன்வைத்த காலை பின்வைக்காமல் தொடர் அமளியில் ஈடுபட, முதலமைச்சர் பேசிய கருத்தில் எந்த தவறும் இல்லை அதனால் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் அழுத்தமாக அறிவித்தார். அதனால், டென்ஷன் ஆன திமுகவினர் பேரவை தலைவரின் இருக்கையை சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கே.என்.நேரு அல்லது எ.வ.வேலு பேச அனுமதி தருவதாகவும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசட்டும் என சபாநாயகர் பலமுறை கூறியும் அதனை ஏற்காத திமுகவினர் முந்தைய நாளைபோன்றே அவைக்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று...
ஒரு கட்டத்தில் அமளியின் தீவிரம் அதிகமானதால், அவை காவலர்களை அழைத்து திமுகவினரை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார் சபாநாயகர். ஆனால், அவையைவிட்டு வெளியேறாமல் திமுகவினர் முரண்டுபிடிக்க, குண்டுகட்டாக தூக்கிச் செல்லும் நிலை உருவானது.

கடந்த ஞாயிறன்று தனக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாகவும், ஆனாலும் முதலமைச்சர் பேசும்போது அவையில் இருந்தே தீர வேண்டும் என்பதற்காகவே திங்கட்கிழமை வந்ததாகவும், அதன்பின்னர் திமுகவினர் செய்த அமளியால் மருத்துவரின்றியே தனது ரத்த அழுத்தம் சீரானதாக கூறி சிரித்தார் சபாநாயகர்.

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்...
இதனிடையே, குண்டுக்கட்டு படலம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு, பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு பதில் சொன்ன முதலமைச்சர் விஜய், சிறந்த நடிகர் என்பதால் முகம் சுழிக்கும் பாடிலாங்குவேஜில் மு.க.ஸ்டாலினை கொச்சைப்படுத்தி பேசுவதா? என ஆவேசப்பட்டார்.

விமர்சனம்...
மேலும், சபாநாயகர் நாற்காலியில் பொன்னம்மா, லீமா ரோஸ் ஆகியோர் ஏற்கெனவே அமர்ந்த வரலாறுகூட தெரியாமல் சத்யபாமாதான் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் என ரீல்ஸ்போடும் தவெகவினருக்கு அரசியல்ரீதியான எந்த சப்ஜெக்டும் தெரியாது எனவும் விமர்சனம் செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved