Also Watch
Read this
மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக தமிழ்நாடு அரசு எப்போதும் நட்புடன் இருக்கும் என்றும், மாநில உரிமை, மக்கள் நலனுக்கு எதிரான செயல் எதுவென்றாலும் நிச்சயம் எதிர்ப்போம் என்றும் முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளார்.

தேசியக் கொடியேற்றினார் முதலமைச்சர் விஜய்
80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய், முதலமைச்சரான பின்பு முதன்முறையாக தாய் நாட்டின் மணிக்கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து முதல்வர் விஜய் ஆற்றிய உரையில் பேசியதாவது;
அனைவரும் ஒன்று சேரும்போதுதான் சாதி, மதம், மொழி, இனம் என அனைத்தும் உடைந்து நொறுங்கும். ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது அரசு செயல்பட்டு வருகிறது

தமிழக மக்களுக்கு நன்றி
இந்த விழாவில் என்னை பேச வைத்த உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள், GenZ இளைஞர்களுக்கு நன்றி. வெளிப்படையான, உண்மையான, நேர்மையான நிர்வாகத்தை நோக்கமாக கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது.

மக்கள் நலனுக்காக மட்டுமே...
தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம். தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் தவெக அரசு எதிர்க்கும்.

திட்டங்களை பட்டியலிட்டு உரை
விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். அரசின் வருமானம் தனிநபருக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது. லஞ்சம், லாவண்யம் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மெருகேற்றி செயல்படுத்துகிறோம்
அம்மா உணவகம் திட்டம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட முந்தைய அரசுகளின் திட்டங்களை இன்னும் மெருகேற்றி விரிவுபடுத்தி செயல்படுத்துகிறோம்.

மாதாந்திர நிதியுதவி உயர்வு
மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000லிருந்து ரூ.7000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாநில அரசின் ஓய்வூதியம் ரூ.25,000 ஆக உயர்த்தப்படுகிறது.
முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000ல் இருந்து ரூ.50,000ஆக உயர்த்தப்படுகிறது.

மக்களே ஆட்சியாளர்கள்
அரசு அலுவலகம் தேடிவரும் மக்களை அலையவிடாமல் அன்பாக கண்ணியமாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்குவதுடன் 2036ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம். மக்களின் பிரதிநிதிகள் மக்களுக்கு சேவை செய்பவர்கள் தான்; ஆனால் மக்களே ஆட்சியாளர்கள்.
இவ்வாறு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உரை நிகழ்த்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved