Also Watch
Read this
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டையில் இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல்வர் விஜய் தேசியக் கொடி ஏற்றினார், அப்துல் கலாம், கல்பனா சாவ்லா பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது.






1947, ஆகஸ்ட் 15
ஆங்கிலேயர்களின் ஆளுமையின் கீழ் இருந்த இந்தியா, 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. நாட்டின் 80ஆவது சுதந்திர தினம் இன்று 15ஆம் தேதி, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


சென்னை தலைமைச்செயலகம் செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக முதல்வர் விஜய் தேசியக்கொடி ஏற்றுகிறார்.

அணிவகுப்புடன்...
இன்று காலை 8.20 மணிக்கு வீட்டில் இருந்து புறப்படும் முதல்வர் விஜய்யை, சென்னை போர் நினைவு சின்னம் அருகே மோட்டார் சைக்கிள் காவலர்கள் வரவேற்று அழைத்து வருவார்கள். கோட்டைக்கு வரும் முதல்வரை தலைமை செயலாளர் சாய்குமார் வரவேற்று, முப்படை தளபதிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைப்பார்.

இதையடுத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்கிறார். பின்னர், கோட்டை கொத்தளம் சென்று சரியாக 8.45 மணிக்கு தேசியக் கொடியை முதல்வர் விஜய் ஏற்றி வைத்து, மரியாதை செலுத்துகிறார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றும் முதல்வர் விஜய், முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

தகைசால் தமிழர்...
இந்த விழாவில் தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த தகைசால் தமிழர் என்ற பெயரிலான விருதும், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை முதல்வர் விஜய் வழங்குகிறார்.

அதேபோல், அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள்,

மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள், முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் முதல்வர் விஜய் வழங்கி கவுரவிக்கிறார்.

கொடியேற்றும் 7ஆவது முதல்வர்
இதற்கு முன்னர் சென்னை கோட்டை கொத்தளத்தில் முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் சுதந்திர தின நாளில் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளனர். அந்த வகையில், 7ஆவது முதல்வராக விஜய் தேசிய கொடியை ஏற்றிவைக்க இருக்கிறார்.

கோலாகலம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டை, ரயில் நிலையங்கள், விமான நிலையம், மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புனித ஜார்ஜ் கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தேநீர் விருந்து கிடையாது...
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் அன்றைய தினம் மாலை, மாநில ஆளுநர், ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர், நீதிபதிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், விஐபிக்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கம். தேசத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலும், அரசு, அரசியல் கட்சியினர் உடன் ஆளுநர் மாளிகைக்கு இருக்கும் உறவை வலுப்படுத்தும் வகையிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆளுநர் மாளிகை விளக்கம்
தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டார். அதன்பின், தமிழகத்துக்கு தனியாக ஆளுநர் நியமிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநர் தான் உள்ளார். கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தான் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல் முதலாக இன்று அவர் தேநீர் விருந்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேநீர் விருந்து இல்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்து உள்ளது. பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கேரளம் செல்வதால் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநரின் தேநீர் விருந்து கிடையாது. இன்று இரவு ஆளுநர் அர்லேகர் சென்னை வருகிறார் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்து உள்ளது.




© Copyright Newstamil 24x7 2026. All rights reserved