Also Watch
Read this
மேட்டூர் அணையை திறந்து வைக்க வந்த முதலமைச்சர் விஜய், விவசாயி வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தும், மூதாட்டிக்கு கூலிங் கிளாஸை கிஃப்டாக கொடுத்தும் திக்குமுக்காட வைத்துள்ளார். களி கிண்டி கொண்டிருந்த மூதாட்டி களிப்பில் முதலமைச்சரின் கையை பிடித்துக் கொண்டு குழந்தைபோல் நடந்து சென்று ஒட்டுமொத்த சமூகவலைதள டிரெண்டிங் PAGEஐ ஆக்கிரமித்துள்ள நிலையில் எங்கள் குலசாமியே வந்து சென்றுள்ளதாக விவசாய குடும்பமே மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

முகம் நிறைய புன்னகை
”வாழும் எம்ஜிஆர் முதலமைச்சர் விஜய்” என தவெகவினர் சட்டமன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூறி வரும் நிலையில், எம்ஜிஆரை போலவே, தனது கருப்பு கண்ணாடியை மூதாட்டிக்கு வழங்கி முகம் நிறைய புன்னகையை வரவழைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

சேலத்தில் முதல்வர் விஜய்
சேலம் மேட்டூர் அணையை திறந்து வைத்து மலர்தூவி வணங்கிய முதலமைச்சர் விஜய், மீண்டும் சென்னை திரும்பினார். செல்லும் வழியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சின்னக்காவூரில் காரை நிறுத்துமாறு கூறிய முதலமைச்சர் விஜய் அங்கிருந்த ராமசாமியின் விவசாய தோட்டத்துடன் கூடிய வீட்டிற்கு திடீர் என்ட்ரி கொடுத்தார். முதலமைச்சரின் கார்தான் என்பதை அறிந்த கிராம மக்களும் சாலையின் இருபக்கமும் திரண்டு கைகளை காட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பதற்றம் போய் பெரு மகிழ்ச்சி
திடீரென தங்கள் வீட்டின் முன்பு வரிசையாக வாகனங்கள் வந்து நின்றதும் பதறிய ராமசாமியும் அவரது மனைவி பழனியம்மாளும் எதற்காக அதிகாரிகள் வந்துள்ளார்கள் என பதற்றமடைந்தனர். அதேபோல், விறகடுப்பில் பனை மட்டையால் களி கிண்டி கொண்டிருந்த ராமசாமியின் தங்கையான 73 வயது மூதாட்டி செல்லமும் படபடத்தார். ஏழ்மை நிலையில் உள்ள அந்த குடும்பத்தினர் அதன் பிறகு தான் வந்திருப்பது முதலமைச்சர் விஜய் என்பதையே கண்டறிந்து பதற்றத்தை விட்டு பெருமகிழ்ச்சியடைந்தனர்.

மூதாட்டிக்கு கிப்ட்
பட்டு - வேட்டி சட்டையில் வந்த முதலமைச்சரின் கன்னத்தை நீவிவிட்டு, விரல்களால் சொடுக்கை முறித்துவிட்டு, தமிழ் பண்பாட்டிற்கே உரிய தன் அளவற்ற பாசத்தையும், நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்திய மூதாட்டி செல்லம், குழந்தை போல முதலமைச்சரின் கையை இறுக பிடித்தபடியே வயலுக்குள் நடந்து சென்றார்.

கூடவே அவரது உறவினர்களும் நடந்து சென்றனர். மூதாட்டி செல்லத்திற்கு தனது விலை உயர்ந்த கூலிங் கிளாஸையும் தன் கையாலேயே அணிவித்த முதலமைச்சர், அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சேலைகள் மற்றும் வேட்டிகளையும் வழங்கினார். தொடர்ந்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

’கனவிலும்கூட நினைக்கவில்லை’
முதலமைச்சர் கிளம்பியதும் அவரது கூலிங் கிளாஸை மூதாட்டியிடம் இருந்து வாங்கி அணிந்து கொண்டு இளைஞர்கள் உற்சாகத்துடன் ஸ்டைலாக போஸ் கொடுத்து செல்பி எடுத்தனர். முதலமைச்சரின் வருகை குறித்து பேசிய மூதாட்டி, தனது பெயர் அழகாக உள்ளதாக சிஎம் கூறியதாகவும், அவரை சிஎம் என்று அழைக்க தனக்கு வரவில்லை, விஜி என்றே அழைத்ததாகவும் வெள்ளந்தியாய் கூறினார்.

விஜியை பார்ப்பேன் என கனவிலும்கூட நினைக்கவில்லை, அவரை பார்த்ததே வயிறு நிறைய உணவருந்தியதுபோல் உள்ளதாகவும் வெகுளியாய் பேசிய செல்லம், முதலமைச்சர் தனக்கு கொடுத்த கூலிங் கிளாஸை பத்திரமாக வைத்து இரவில் மட்டுமே எடுத்து பார்த்துக் கொள்வேன், பகலில் காட்டு வேலை செய்வதால் அழுக்காகிவிடும் என பல் இல்லாத பொக்கை வாயால் மழலைபோல் சிரித்தார்.

எங்கள் குலசாமியே...
அதேபோல், முதலமைச்சரை பார்த்ததும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை எனக்கூறிய ராமசாமியின் மனைவி பழனியம்மாள், எங்கள் குலசாமியே வந்து சென்றதுபோல் உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved