Also Watch
Read this
By: Tamil selvi
மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டம், அக்டோபர் இரண்டாம் தேதி முதல் ’வெற்றிப் பயணத் திட்டம்’ என்கிற பெயரில் மேலும் விரிவாக்கப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார். சாதாரண பேருந்து மட்டுமின்றி மாநகர், நகர பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் மகளிர் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம் என்றும் கூறி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில்...
தமிழக சட்டப்பேரவை இன்று ஆகஸ்ட் 24ஆம் தேதி, கூடியது. இதில் பேரவையின் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் அறிவித்தார். அவர் பேசியதாவது;
ஒரு மாநிலத்தின் உண்மையான முன்னேற்றம் என்பது அதன் பொருளாதார வளர்ச்சியால் மட்டுமல்ல, பெண் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வணிகம் மற்றும் சமூக வாழ்வின் அனைத்து தளங்களிலும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பங்கேற்கும் வாய்ப்புகளாலும் அளவிடப்படுகிறது. மகளிரின் பயண சுதந்திரம், அவர்களின் பொருளாதார சுதந்திரத்திற்கும் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக உள்ளது.

மகளிர் பேருந்து திட்டத்தில்...
தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தில் மாநகர், நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் 40 கிமீ வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் ஒரு மகளிரும் போக்குவரத்து கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையை இந்த அரசு முதன்மையாகக் கொண்டுள்ளது.
மகளிர் வெற்றிப் பயணம்
இதனை கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

வெற்றிப் பயணத் திட்டம்
இதன்படி, முதல் கட்டமாக மாநகர், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி மாநகர், நகர்ப் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம். கூடுதலாக, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரண கட்டணப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயன்பெற, வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ள விரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. ‘வெற்றிப் பயணத் திட்டம்,’ இதர சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

பொருளாதார முன்னேற்றம்
இதன்மூலம், மாநிலம் முழுவதும் மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். இதன்மூலம் மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும். வெற்றிப் பயணம் என்பது கட்டணமில்லா ஒரு பேருந்துப் பயணம் மட்டுமல்ல, ஒரு மாணவியின் கல்வி, ஒரு தொழிலாளியின் வேலைவாய்ப்பு, ஒரு தாயின் குடும்பப் பொறுப்பு, ஒரு தொழில்முனைவோரின் முன்னேற்றம் போன்றவற்றை உறுதிசெய்யும் சமூக முதலீடு. தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், மகளிரின் இயக்க சுதந்திரத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரசு உறுதுணையாக இருக்கும்.

ரூ.6,000 கோடி செலவினம்
இந்த திட்டத்தின்கீழ், திருநரும் கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ளலாம் ‘வெற்றிப் பயணம்’ வழியாக மகளிரின் வாய்ப்பு விரிவடைந்து, குடும்பங்கள் முன்னேறி, சமூகநீதியும் சமத்துவமும் நிலைபெற்று, வளமான வெற்றித் தமிழ்நாட்டை உருவாக்கும் நமது பயணம் மேலும் வலுப்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் தோராயமாக 6000 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும்.
இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved