Also Watch
Read this
By: Manigandan Raja
தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் இடம் பிடித்துள்ளார் ஜெயலலிதா என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பிப்.24 ஜெயலலிதா பிறந்த நாள்
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவு:
ஜெயலலிதா பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து, வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத் திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன்
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியிலும்...
இந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சியிலும் ஜெயலலிதாவை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியிருந்தார். அதில் கூறியதாவது:
சிலர் எப்போதும் மக்களின் இதயங்களில் நீங்காமல் குடிகொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஜெயலலிதா. மக்கள் போற்றும் மகத்தான தலைவராக விளங்குகிறார். பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள். அவர் மீது தமிழக மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இருக்கும் ஈடுபாடு ஆழமானது. அவர் முதல்வராக இருந்தபோது பெண்கள், தாய்மார்கள், சகோதரிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். சட்டம் - ஒழுங்கை சீராக வைத்திருந்தார்.

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் மீது மிகுந்த பெருமிதம் கொண்டிருந்தார். அவரிடம் தேசபக்தி உணர்வு மிகவும் செறிவாக இருந்தது. எண்ணம் தெளிவாக இருந்தது, கருத்துக்கள் நிறைவாக இருந்தன. ஜெயலலிதா உடனான என்னுடைய ஒவ்வொரு சந்திப்பும், உரையாடலும் என் மனதில் பசுமையாகப் பதிந்துள்ளன. அவருடைய நட்புணர்வை என்னால் மறக்கவே முடியாது. அவருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசி இருந்தார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved