Also Watch
Read this
அரிய வகை குரங்குடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் விக்ரமுக்கு வனத்துறை கெடு விதித்துள்ளது. முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால், சீயான் விக்ரம் மீது சட்ட நடவடிக்கை பாயும் என தகவல் வெளியாகி உள்ளது.

சாதாரண குரங்கல்ல...
சமூக வலைதளத்தில் ஜாலியாக பதிவிட்ட ஒரு நிமிட வீடியோ, சீயான் விக்ரமுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில், அரிய வகை குரங்கு குட்டி ஒன்று விக்ரமின் முடியை பிடித்துக்கொண்டு சேட்டை செய்ய, அதனுடன் விக்ரம் கொஞ்சி விளையாடும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனை ரசிகர்கள் ரசித்து பார்த்து கொண்டிருக்கும் வேளையில், வன உயிரின ஆர்வலர்கள் சுதாரித்து கொண்டு, "இது சாதாரண குரங்கு இல்லப்பா, தென்கிழக்கு ஆசிய நாடுகளை பூர்வீகமாக கொண்ட லார் கிப்பன் எனப்படும் அரிய வகை குரங்கு," என்று ஆதாரங்களை தட்டி தூக்கினர்.

மகள் வீட்டில்...
இந்தியாவில் உள்நாட்டு குரங்குகள் மட்டுமின்றி, சர்வதேச அளவில் அருகிவரும் வெளிநாட்டு வனவிலங்குகளை வீடுகளில் வளர்ப்பதும், வணிக ரீதியாக வாங்குவதும் சட்டவிரோதமாகும். ஆகவே, சர்ச்சை வெடித்ததும் உஷாரான விக்ரம், உடனடியாக அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்திலிருந்து நீக்கினார். இருப்பினும் வனத்துறை சும்மா இருக்குமா? வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படும் நீலாங்கரையில் உள்ள விக்ரமின் மகள் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விடுமுறை நாளில் மகளை பார்க்க சென்ற விக்ரம், அங்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட குரங்கை பார்த்து ஆசையாக கொஞ்சி வீடியோ எடுத்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வனத்துறை நோட்டீஸ்
விசாரணை இதோடு முடியாமல், முட்டுக்காட்டில் படப்பிடிப்பில் இருந்த விக்ரமிடம் வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.

தடை செய்யப்பட்ட லார் கிப்பன் குரங்கு உங்களிடம் எப்படி வந்தது? அதை யார் கொண்டு வந்து கொடுத்தார்கள்? சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு திடீரென நீக்கியதற்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளை எழுப்பினர்.

பின்னர் எழுத்துப்பூர்வமாக விக்ரமிடம் பதிலை பெற்ற அதிகாரிகள், 3 நாட்களுக்குள் இந்த குரங்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், உரிமையாளர் விவரங்களையும் நேரில் சமர்பிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

எப்படி மீளப் போகிறார்?
இந்த விவகாரத்தின் வேர், ஈரோடு வரை நீண்டுள்ளது. அந்த குரங்கை விற்பனைக்காக கொண்டு வந்த நபரின் பண்ணை வீடு ஈரோட்டில் உள்ள நிலையில், அங்கு வனத்துறை சோதனை நடத்தியுள்ளது. மணிப்பூர் வழியாக சட்டவிரோதமாக இந்த அரிய வகை உயிரினங்கள் கடத்தப்பட்டு வந்தனவா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்து உள்ளது.

கொடுக்கப்பட்ட 3 நாட்களுக்குள் முறையான ஆவணங்களையோ அல்லது திருப்திகரமான விளக்கத்தையோ விக்ரம் தரப்பு சமர்ப்பிக்க தவறினால், இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விக்ரம் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

திரையில் எத்தனையோ சவாலான கதாபாத்திரங்களை சமாளித்த சீயான், இந்த லார் கிப்பன் சிக்கலில் இருந்து எப்படி மீளப் போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved