Also Watch
Read this
By: Web Team

45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரயில்களில் லோயர் பெர்த் வசதி வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
முன்பதிவு செய்யும்போது தங்கள் விருப்பத்தை தேர்வு செய்யாவிட்டாலும் முன்னுரிமை அடிப்படையில் லோயர்பெர்த் வழங்க ஏற்பாடு
மாநிலங்களவையில் ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தொடர்பான கேள்விக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், ரயில் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏராளமான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மூத்த குடிமக்கள், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிகளுக்கு ரயிலில் கீழ் படுக்கை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்பதிவின்போது, தங்கள் விருப்பமாக அதை தேர்வு செய்யாவிட்டாலும் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு வசதி செய்து தரப்படும். இதற்காக படுக்கை வகுப்பில் ஒரு பெட்டிக்கு ஆறு முதல் ஏழு பெர்த்களும், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் நான்கு முதல் ஐந்து பெர்த்களும், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் மூன்று முதல் நான்கு பெர்த்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ராஜ்தானி, சதாப்தி மற்றும் அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் உடன் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் சிறப்பு முன்பதிவு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளது.
ஸ்லீப்பர் மூன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் தலா நான்கு பெர்த்களும், அவர்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் கீழ் படுக்கைகள் காலியாக இருந்தால், வேறு பெர்த்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகளுக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்படும்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது
ரயில்களில் அகலமான பெர்த்கள், அகலமான கதவுகள், சக்கர நாற்காலி நிறுத்தும் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, கழிப்பறைகளிலும் அவர்களுக்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், பார்வை குறைபாடு உடையவர்கள் எளிதாக பயணிக்கும் வகையில் ப்ரெய்ல் எழுத்துக்களுடன் கூடிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நவீன அம்ரித் பாரத் மற்றும் வந்தே பாரத் ரெயில்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved