Also Watch
Read this
மத்திய அரசின் FCRA எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து,
சிறுபான்மையினர், தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடும் எனக்கூறி, அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு
மத்திய அரசு கொண்டுவந்த FCRA திருத்த சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான இந்த தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்து பேசியதாவது;
FCRA விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பெரிதும் பாதிக்கும்.

தவெக அரசு வலியுறுத்தும்...
மதம், கல்வி, மருத்துவம் மற்றும் சமூக அமைப்புகள் விவகாரத்தில், மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்த வேண்டும். இந்த சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர். FCRA மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். இந்த மசோதாவிற்கு எதிராகத் தவெக அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தும்.

உரிமைகள் பாதுகாப்பு
ஒன்றிய அரசு கொண்டுவந்த FCRA மசோதாவுக்குத் தமிழ்நாடு அரசு தனது கடும் ஆட்சேபனையைத் தெரிவிக்கிறது. கொண்டு வரப்படும் எந்த ஒரு திருத்த மசோதாவும் சொத்துரிமை பாதுகாப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். வெளிநாட்டுப் பங்களிப்புடன் சட்டப்பூர்வமாகச் செயல்படும் தொண்டு அமைப்புகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தீர்மானத்தை முன் மொழிந்தார்.

பாஜக ஆதரவு இல்லை
எப்.சி.ஆர்.ஏ. மசோதாவிற்கு பாஜக ஆதரவு இல்லை என பாஜக எம்எல்ஏ போஜராஜன் கூறினார். ஆளும் தவெக அரசு கொண்டுவந்த இந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக மற்றும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தங்களது முழுமையான ஆதரவை வழங்கின.

இந்த தீர்மானத்திற்கு பாஜக எம்எல்ஏ போஜராஜன், ’நல்ல சமூக திட்டங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியை மத்திய அரசு எதிர்க்கவில்ல,, நிதி பரிவர்த்தனைகளை முறைப்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கம்,’ என்று கூறிவிட்டு, வெளிநடப்பு செய்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved