Also Watch
Read this
By: Web Team

பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள் என்று, பீகாரில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரை பேரணியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆயிரத்து 300 கிமீ, 'வாக்காளர் அதிகார யாத்திரை'யை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
இன்று நடைபெற்ற யாத்திரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
தொடர்ந்து, முசாபர்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:
பீகார் மாநில மக்களைப் பார்ப்பதற்காகத் தான் 2,000 கிமீ கடந்து இங்கே வந்திருக்கிறேன்.
பீகார் என்றாலே, மரியாதைக்குரிய லாலு பிரசாத் யாதவ் தான் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். சமூகநீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடையாளம் அவர்.
கடந்த ஒரு மாத காலமாக, இந்தியாவே பீகாரை தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது தான் உங்களின் பலம், ராகுல் காந்தியின் பலம், தேஜஸ்வீயின் பலம்.

இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அதற்கான போர்க்குரலை பீகார் எழுப்பியிருக்கிறது. ‘லோக் நாயக்’ ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜனநாயகத்தின் குரலை, சோசலிசத்தின் குரலை எதிரொலித்தார். அதற்காக மக்கள் சக்தியை அவர் திரட்டினார்.
அந்தப் பணியைத் தான், அருமைச் சகோதரர் ராகுல் காந்தியும், தம்பி தேஜஸ்வீயும் இங்கு செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் செல்லும் இடம் எல்லாம், கடல் போல மக்கள் திரண்டு வருகிறார்கள்.
பாஜகவின் துரோக அரசியல் தோற்கப் போகிறது. தேர்தலுக்கு முன்பே உங்களின் வெற்றி உறுதியாகிவிட்டது. அதனால் தான் இந்த வெற்றியைத் தடுக்க பார்க்கிறார்கள்.
இங்கே 65 லட்சம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது, ஜனநாயகப் படுகொலை. இதைவிட பயங்கரவாதம் இருக்க முடியுமா?
மிரட்டலுக்கெல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா? ராகுல் காந்தியின் வார்த்தைகளிலும் கண்களிலும் எப்போதும் பயம் இருக்காது.

மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பாஜகவின் அதிகாரத்தை, மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள்.
மக்கள் சக்திக்கு இணையானது எதுவுமில்லை என்று சகோதரர் தேஜஸ்வீ காட்டிக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் இரண்டு பேரும் பெறப்போகும் வெற்றிதான், இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைய இருக்கிறது.
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் வெற்றிவிழா கூட்டத்திலும் நிச்சயமாக, உறுதியாக நானும் பங்கேற்பேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved