கனமழை காரணமாக, டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை கணக்கிட்டு, ஏக்கர் ஒன்றிற்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் மட்டும் மழைநீர் சூழ்ந்து சுமார் 3 லட்சம் ஏக்கரிலான நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதே போல், தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிலை சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்திருந்தால் அதனை பெற்று தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.