Also Watch
Read this
"பிக்பாஸ்" நிகழ்ச்சியில் தலைமைப்பண்பு பற்றி நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்து, முதலமைச்சர் விஜயை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக சர்ச்சை வெடித்த நிலையில், அவரும், விஜய் டிவி நிர்வாகமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என விஜய் ரசிகர்களும், விர்ச்சுவல் வாரியர்களும் கண்டனக்குரல் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படும் கருத்துகளை வெளியே இருக்கும் சூழலுடன் பொருத்தி பார்க்கக் கூடாது என விளக்கம் அளித்திருக்கிறது விஜய் டிவி.

தனியார் தொலைக்காட்சியில்...
சர்ச்சைகளுக்கு பெயர் போன பிக்பாஸ் நிகழ்ச்சி, எப்போதும் ஆரம்பித்து கொஞ்ச நாட்கள் ஓடிய பிறகே சூடுபிடிக்க தொடங்கும். ஆனால் நடப்பு சீசனிலோ விஜய் சேதுபதியின் பேச்சால், ஆரம்பமே அதிரடியாக இணையவாசிகளின் கண்டெண்ட் பசிக்கு தீனி போட்டு அனல் பறக்க துவங்கியிருக்கிறது.

10ஆவது சீசனில்...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10ஆவது சீசன், கடந்த 6ஆம் தேதி அன்று தான் தொடங்கியது. 8 மற்றும் 9ஆவது சீசனை தொடர்ந்து இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் நேரலை அதிக பார்வையாளர்களை ஈர்த்ததோடு, அதனை அடியொற்றி சமூகவலைதளங்களில் மீம்ஸ் வீடியோக்களும் முளைத்தன. கண்டெண்ட் கிரியேட்டர்கள் சட்டமன்ற கான்செப்டை வைத்து தங்களுக்கேற்ப தயாரித்து வெளியிட்ட வீடியோக்களுக்கு பெரும் வரவேற்பும் கிடைத்தது.

சட்டப்பேரவை கூட்டத் தொடர்
இந்த சட்டமன்ற ஃபீவர் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் விட்டு வைக்கவில்லை. நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே சட்டமன்ற நிகழ்வுகளின் அடிப்படையில், போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு, அதில் அவர்களின் செயல்பாடு எப்படி இருந்தது? என்பதை வார இறுதி எபிசோடில் விஜய் சேதுபதி விளக்கி பேசினார்.

தலைமைப்பண்பு என்பது...
ஒரு போட்டியாளரை பார்த்து, ’தலைமைப்பண்பு என்றால் என்னவென்றே தெரியாமல், வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்து விட்டு, பிரச்சனை வரும்போது எதிரணி மீது பழியை போட்டு விட்டு தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி கிடையாது, அதற்கு பெயர் ஏமாற்று வேலை,’ எனவும் தெரிவித்தார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதிக்கு எதிராக...
மேலும், ஜனநாயகம் என்றால் என்ன? என வகுப்பெடுத்த விஜய் சேதுபதி, எதிர்ப்பதற்கு ஆள் இல்லை என்றால் ஒரு லீடரால் எப்படி முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும்? என்றும் பேசியிருந்தார். இந்த பேச்சை கேட்டு கொந்தளித்து போன தவெகவினர், முதலமைச்சர் விஜயை தான் மறைமுகமாக அட்டாக் செய்கிறார் என்று கூறி விஜய் சேதுபதியை சமூகவலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.

கரூர் சம்பவத்தை இணைத்து...
இதுமட்டுமின்றி அதே எபிசோடில், ‘2 சொட்டு கண்ணீருக்கு மயங்கி விடுவீர்களா?’ என்றும் போட்டியாளர்களை பார்த்து கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி, ’ஒரு பொறுப்புல இருந்தீங்கன்னா, அதுக்கு மேல ஒரு அழுத்தம் இருக்கும், அதுக்கு கேள்வி கேட்டா பதில் சொல்ல வேண்டியது உங்களோட வேலை,’ எனவும் தெரிவித்தார்.

இந்த பேச்சை கரூர் சம்பவத்துடன் இணைத்தும், முதலமைச்சர் விஜய் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை என்பதை தான் விமர்சிக்கிறார் என்றும் கூறி, கண்டன பதிவுகளை பறக்கவிட்டனர். தனது பேச்சுக்காக விஜய் சேதுபதியும், விஜய் தொலைக்காட்சியும் மன்னிப்பு கேட்பதோடு, பிக்பாஸ் நிகழ்ச்சியையே ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.

டிவி நிறுவனம் விளக்கம்
இந்த நிலையில் தான், ‘விஜய் சேதுபதியின் பேச்சு பிக்பாஸ் நிகழ்ச்சியை மையப்படுத்திய சூழலுக்கு உட்பட்டதே தவிர, எந்தவொரு தனி நபர், அமைப்பு அல்லது கொள்கையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது,’ என விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளது.

’பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் எந்தவொரு கருத்தையும், வெளியே உள்ள சூழ்நிலையை விமர்சிப்பதாகவோ அல்லது பிரதிபலிப்பதாகவோ கருதக்கூடாது,’ என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விளக்கம், விமர்சனங்களை தணித்ததாக தெரியவில்லை என்றாலும், விஜய் டிவி தங்களுக்கு பணிந்து விட்டதாக ஃபயர் விட்டு வரும் விர்ச்சுவல் வாரியர்ஸ், ’விஜய் சேதுபதியும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்,’ என வலியுறுத்தி வருகின்றனர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved