Also Watch
Read this
காவிரி நீருக்காக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்து உள்ளார்.
கர்நாடகா சதிவலை...
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
காவிரி நீருக்காக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது, வேண்டாம் இந்த விஷப் பரீட்சை.
நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாக போராடி பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சி அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும். இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக திமுக நிராகரித்தது.

முதல்வருக்கு வேண்டுகோள்
கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, விவசாய சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை
தமிழ்நாடு முதலமைச்சர் தனது முடிவை மறுபரிசீலனை செய்திட வேண்டும்.
கடந்த காலங்களில் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற யோசனை சொல்லப்பட்ட போதெல்லாம், அதனை உறுதியாகத் திமுக அரசு நிராகரித்தது.உரிமையை நிலைநாட்டுவதாக இல்லாமல் பிரச்சினையை இழுப்பதாகவே பேச்சுவார்த்தைகள் அமைந்து விடும்.

விவசாயிகள் கொந்தளிப்பு
இந்நிலையில், கர்நாடக மாநிலம் சென்று அம்மாநில முதலமைச்சருடன் தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என வேளாண்துறை அமைச்சரே தெரிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெருங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ்நாடு அரசின் 30 ஆண்டுகாலச் சட்டப் போராட்டத்தைச் சிதைப்பதாக அமைந்துவிடும். கர்நாடக மாநிலம் விரித்திருக்கும் சதிவலையில் வலியச் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் சிக்குவது ஏன்?

கண் துடைப்புக்காக...
கர்நாடக மாநிலத்தை ஆள்வது காங்கிரஸ். தமிழ்நாடு அரசிலும் காங்கிரஸ் கட்சி பங்கு வகிக்கிறது. எனவே, கண் துடைப்புக்காக இதுபோன்ற பேச்சுவார்த்தை நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? காவிரி நீர் உரிமையின் ஆழ அகலங்களைப் புரிந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். காவிரி போன்ற தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையையும் விவசாயச் சங்கங்களின் கருத்துகளையும் பெற்ற பின்பே செயல்பட வேண்டும். காவிரி உரிமை தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்குக் கர்நாடகா செல்லும் தவறான முயற்சியை முதலமைச்சர் கைவிட வேண்டும்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.