Also Watch
Read this
எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி என, திமுக தலவைர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

வீட்டில் ஓய்வு...
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி.
வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பொதுச் செயலாளர் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அன்பு, அக்கறைக்கு நன்றி
தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓரிரு நாட்கள்...
மருத்துவர் அறிவுரைப்படி, இன்னும் 2, 3 நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன். பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான நேற்று, திமுகவினர் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். அதேபோல், செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

திமுகவின் 78ஆம் ஆண்டு
தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், கட்சி அறிவித்துள்ளபடி, சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து அலுவலகங்களிலும் ஏற்றிட வேண்டும். திமுகவின் 78ஆம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கட்சிக் கொடிகளைப் புதுப்பித்து ஏற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved