Also Watch
Read this
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க அமைச்சர் ஒன்றும் இங்கிலாந்து மன்னர் அல்ல என்று கண்டித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்...
சகோதரரை தாக்கிய வழக்கில், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய அமைச்சர் மரிய வில்சனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விலக்கு கோரிய வழக்கறிஞர்
இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கூடுதலாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்னும் பெறப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஆஜராக மாட்டாரா?
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ’நீதிமன்றத்துக்கு வர முடியாது,’ எனக்கூற நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரர் மாநிலத்தின் நிதி அமைச்சர் தான். அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், பதவிக்கு வந்தபிறகு ஆஜராக மாட்டாரா? எனக் கேள்வி எழுப்பினார்

கட்டாயம் ஆஜராக வேண்டும்
அப்போது, புதுச்சேரி காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேளாங்கண்ணி ஆலய கொடி ஏற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். அதற்கு நீதிபதி, அமைச்சர் வேளாங்கண்ணி சென்று திரும்பும்போது, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகலாமே? என்று கேள்வி எழுப்பினார். மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது. அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பவில்லை எனக்கூறி, அவர் கட்டாயம் ஆஜராக வேண்டும் எந்த தேதியில் அமைச்சர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் எனத் தெரிவிக்கும்படி கூறி வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்துள்ளார்.

வழக்கு தள்ளுபடி
பிற்பகலில், வழக்கு விசாரணையின் போது, நிதியமைச்சர் மரிய வில்சன் தரப்பில் மனு வாபஸ் பெறப்பட்டது.


ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பிறகு, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக, மரியவில்சன் தரப்பில் கூறப்பட்டது, இதனை தொடர்ந்து வழக்கு தள்ளுபடியானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved