Also Watch
Read this
Posted on: Mar 17, 2026 07:45 AM
திமுக ஆட்சியை விரட்டியடிக்க தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
என்டிஏ ஆர்ப்பாட்டம்
அரசுக்கு எதிராக, என்டிஏ கூட்டணிக் கட்சிகள் சார்பில், சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இபிஎஸ் பேசியதாவது;
தமிழகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தன் குடும்பம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில், மு.க.ஸ்டாலின் தமிழகத்தை ஆட்சி செய்தார். இப்போது மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் நேரம் வந்து விட்டது. திமுக ஆட்சி அமைந்தது முதலே தமிழகத்தில் சர்வ சாதாரணமாக கிராமம் முதல் நகரம் வரை ஜரூராக போதைப்பொருள் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. நம் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க வேண்டும் என்ற கனவோடு பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்புகிறோம். ஆனால், திமுக ஆட்சியில் பள்ளி, கல்லூரிகள் அருகிலேயே நடக்கும் கஞ்சா விற்பனையால் மாணவர்கள் சீரழியும் காட்சியை பார்க்கிறோம். நெல்லையிலே 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மது அருந்தும் காட்சி வெளியாகி வேதனையை ஏற்படுத்தியது. இதனைப் பற்றியெல்லாம் ‘அப்பா’ ஸ்டாலின் கவலைப்படவே இல்லை.
மணல் கடத்தல், கொள்ளை
கரூரில் ரவுடிகளை வைத்து 3,000 லாரிகளில் தினமும் ரூ.1.5 கோடிக்கு மணல் கடத்தப்படுகிறது. அதிகாரிகள் துணையுடன், திமுக முன்னாள் அமைச்சர் இந்த கனிம வளக் கொள்ளையில் முழுமையாக ஈடுபட்டு உள்ளார். இதுவரை பணம், நகையை திருடியே பார்த்திருப்போம். ஆனால், மனித உடல் உறுப்புகளையே திருடும் ஆட்சி. நாமக்கல்லில் வறுமை காரணமாக ஏழைகளிடம் சிறுநீரகத்தை, திமுக எம்எல்ஏவின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முறைகேடாக திருடி உள்ளனர். இதன் மீது எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.
ரூ.24,000 கோடி முறைகேடு
டாஸ்மாக் பாட்டில் விற்பனை மூலம் 24 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்து உள்ளது. திமுக ஆட்சியில் அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்து விட்டது. திமுக ஆட்சியில் மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து விட்டது. அதிமுக ஆட்சியில் 1000 ரூபாய் மின்கட்டணம் செலுத்தியவர்கள் இப்போது 2500 ரூபாய் செலுத்துகின்றனர். சொத்துவரி, கட்டட அனுமதி கட்டணம் பலமடங்கு உயர்ந்து உள்ளது. கடன் வாங்குவதில் தான் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது.
மக்கள் முடிவு
இந்த ஆண்டு பிறந்தது முதல், கடந்த 75 நாட்களில் மட்டும் 246 கொலைகள் தமிழகத்தில் நடந்து உள்ளன. இந்த ஆட்சியில் குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2021 தேர்தலுக்காக 525 வாக்குறுதிகளை திமுக வெளியிட்டது. நான்கில் ஒரு பங்கினை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக ஸ்டாலின் சொல்கிறார். உண்மையை மக்கள் புரிந்து கொண்டனர். இந்த ஆட்சியை விரட்டியடிக்க தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர்.
என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்
அரசு ஊழியர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடுகின்றனர். இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம், தமிழகத்தில் நிரந்தர சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்படவில்லை. நீதிமன்றம் குறிப்பிட்டும் 9 மாதங்களாக டிஜிபியை நியமிக்க திராணியற்ற அரசு உள்ளது. ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved