Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்பார் என நம்புகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
குளச்சல் துறைமுக விரிவாக்க பணிகளைத் தொடங்கிட வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் என்னைச் சந்தித்து, தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் இந்த நியாயமான கோரிக்கையை மத்திய நிதியமைச்சர் ஏற்றுக்கொண்டு, விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, எம்பி கனிமொழி ஆகியோர் டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். தமிழகத்துக்கான நிதியை விடுவிக்கும்படி, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளதாவது:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2025-26ஆம் ஆண்டு நிதியாண்டில், நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கான நிதியையும், மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு 350 கோடி ரூபாய் நிதியையும் விரைந்து வழங்கிட ஒப்புதல் அளிக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தை, இன்று நிதியமைச்சரிடம் வழங்கினோம். தமிழக அரசு சார்பில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழியுடன் இணைந்து, இன்று டில்லியில் கடிதத்தை வழங்கி, விரைவில் நிதி வழங்கிட ஏற்பாடு செய்யும்படி வேண்டுகோள் விடுத்தோம்.
இவ்வாறு தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved