Also Watch
Read this
நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக குரல் கொடுத்து, மாணவர்களுக்காக காவல் வாகனத்தையே வழிமறித்து தேசிய அளவில் கவனம்பெற்ற மாடல் அழகி ரியா அஹிர், தற்போது தனக்கு நடக்கும் கொடூரமான இணையவழி அச்சுறுத்தல் குறித்து, புகாரளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்ணீர் மல்க குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஒரே இரவில், தேசிய அளவில்...
நீட் தேர்வு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளில் நடக்கும் வினாத்தாள் கசிவு, முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் தான், மும்பையில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, அநியாயமாக கைது செய்து அழைத்து செல்லப்பட்ட மாணவர்களை காப்பாற்ற, காவல்துறை வாகனத்தின் முன்னே குறுக்கே நின்று தைரியமாக வழிமறித்தார் 27 வயதான மாடல் அழகி ரியா அஹிர்.

அந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவ, ஒரே இரவில் தேசிய அளவில் மாணவர்கள் போராட்டத்தின் அடையாள முகமாக மாறினார் ரியா.

கடந்து போக முடியாது
ஆனால், போராட்டக் களத்தில் தைரியத்தை காட்டிய ரியாவுக்கு, அதன்பின்னர் சமூக வலைதளங்களில் காத்திருந்தது மிக மோசமான அவதூறுகளும், இணையவழி அச்சுறுத்தல்களும் தான். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியுடன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய ரியா அஹிர், தனக்கு நேர்ந்த கொடூரங்களை நினைத்து கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். சில குறிப்பிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சிலர் இணைந்து தன்னை 140 ரூபாய்க்கு உடலை விற்கும் பெண் என்றெல்லாம் இழிவாக சித்தரித்து பரப்பி வருவதாகவும், இதை சாதாரண மீம்ஸ் என்றோ, ட்ரோல் என்றோ கடந்துபோக முடியாது என்று கொதித்தெழுந்தார்.

கண்ணீருடன் ரியா
மேலும், தொடர்ந்து தனது புகாரை பற்றி கூறிய ரியா, கடந்த 27ஆம் தேதியே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் ஆனால், தற்போது வரை FIR கூட தனக்கு வழங்கப்படவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தான் போராடியது மாணவர்களுக்காக, ஆனால் இப்போது தான் துன்புறுத்தப்படுவதாகவும் வேதனை தெரிவித்தார். ஊடகங்கள் தன்னை வெறும் வைரல் பெண் என்று குறுக்க வேண்டாம். சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்படவிருந்த மாணவர்களை காப்பாற்றிய ஒரு சராசரி பெண்ணாகப் பாருங்கள் எனவும், நாட்டில் பெண் குழந்தைகளை படிக்கவும் விடுவதில்லை, அவர்களை பாதுகாக்கவும் விடுவதில்லை எனக் கண்ணீருடன் கூறியிருக்கிறார் ரியா.

புயலைக் கிளப்பிய விவகாரம்
ரியாவின் புகார்களை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக சாடினார். கல்வி முறை சீர்திருத்தம், வினாத்தாள் கசிவுக்கு எதிராக குரல் கொடுத்த மாணவர்களை இந்த அரசு அதிகாரத்தை பயன்படுத்தி அச்சுறுத்துகிறது.

மாணவர்களின் வீடுகளுக்கே ஆட்களை அனுப்பி மிரட்டுகிறார்கள் என்றும், போராட்டத்தின் போது 15 வயது சிறுமி ஒருவரை வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்த கொடூரத்தையும் இந்த நாடு பார்த்திருக்கிறது என்றும் சீறினார்.

மாணவர்களுக்காக களமிறங்கிய ஒரு பெண்ணுக்கு நடக்கும் இந்த இணையவழி தாக்குதலும், காவல்துறையின் அலட்சியமும் மக்களிடையே புயலை கிளப்பியிருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved