Also Watch
Read this
நீண்ட பரிசீலனைக்கு பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வித்தியாசமாக வீடியோ மூலம் வெளியிட்டு உள்ளார் கட்சியின் தலைவர் திருமாவளவன். இந்த தேர்தலில் திருமாவளவனே களமிறங்குவது குறித்தும், இதுதான் தாம் தேர்வு செய்யும் கடைசி வேட்பாளர் பட்டியல் என்றும், அவர் வைத்துள்ள சஸ்பென்ஸ் பேசுபொருளாகி உள்ளது.

விசிகவுக்கு 8 தொகுதிகள்
திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது ஆரம்பம் முதலே கடும் இழுபறியாக இருந்து வந்தது. காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட முக்கியக் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட பிறகும் கூட, விசிகவுக்கான தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வந்தது. ஒருவழியாக, நீண்ட இழுபறிக்கு பிறகு விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. காட்டுமன்னார்கோவில், திண்டிவனம், செய்யூர், திருப்போரூர், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், பண்ருட்டி, பெரியகுளம் ஆகிய 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பெரியகுளம் தவிர, மற்ற 7 தொகுதிகளும் வடமாவட்டங்களை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ வெளியிட்டு அறிவிப்பு
இந்த சூழலில், வழக்கத்துக்கு மாறாக புதிய முறையில் வீடியோ மூலம் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன். இதில், ஹைலைட் என்னவென்றால், 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவனே நேரடியாக களத்தில் குதித்துள்ளார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் இதே தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விடைந்தார்.

வேட்பாளர்கள் யார் யார்?
செய்யூர் தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன், திண்டிவனத்தில் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, பெரியகுளத்தில் துணைப் பொதுச் செயலாளர் சக்திவேல் என்கிற ஆற்றல் அரசு, அரக்கோணத்தில் துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின், பண்ருட்டி தொகுதியில் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில செயலாளர் அப்துல் ரகுமான், திருப்போரூரில் கட்சியின் அமைப்புச் செயலாளர் பன்னீர்தாஸ், கள்ளக்குறிச்சியில் வழக்கறிஞர் மாலதி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

"இதுதான் நான் தேர்வு செய்யும் கடைசி வேட்பாளர் பட்டியல்"
கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆளூர் ஷானாவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க முடியவில்லை எனவும், அரூர் தொகுதியை பெற்றுத் தர முடியவில்லை எனவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

அதோடு, இதுதான் தேர்தல் அரசியல் எனவும், இந்த அரசியலை எதிர்கொண்டாக வேண்டும், நெருக்கடிகளை கடந்து சென்றாக வேண்டும், நாம் மகத்தான அரசியல் சக்தி என்பதை உறுதி செய்தாக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, இதுதான் தாம் தேர்வு செய்யும் கடைசி வேட்பாளர் பட்டியல் என திருமாவளவன் அறிவித்திருப்பது தான், அவரது கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மாநில அரசியலில் கவனம்
அதாவது, ஏராளமானோர் விருப்பமனு அளித்துள்ள நிலையில், குறிப்பிட்ட நபரை மட்டும் தேர்வு செய்யும் இக்கட்டான நிலை கட்சித் தலைவருக்கு இருக்கக் கூடாது என்பதால், இனி வரும் காலங்களில் மாவட்ட நிர்வாகிகளே வேட்பாளரை தேர்வு செய்து அனுப்புவார்கள் எனவும், இதைத்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடைப்பிடித்து வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமாவளவன், திடீரென சட்டமன்றத் தேர்தலில் குதித்திருப்பது ஏன்? என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக வீடியோவில் பேசியுள்ள திருமாவளவன், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் பெரும் மாற்றம் நிகழ உள்ளதாகவும், எனவே, மாநில அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளதால் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved