Also Watch
Read this
By: Manigandan Raja

அதிபர் டிரம்ப் தடையை தொடர்ந்து அனுமதி மறுப்பு
அமெரிக்க அதிபர் டிரம்பின் தடை உத்தரவைத் தொடர்ந்து முன்னணி செய்தி நிறுவனங்களான CNN, MS NOW மற்றும் Politico ஆகியவற்றின் செய்தியாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அவர்களது அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஊடகங்கள் தன்னைப்பற்றியும், தனது நிர்வாகத்தைப் பற்றியும் தொடர்ந்து பொய்யான செய்திகளையும் போலி அறிக்கைகளையும் வெளியிடுவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை விதித்தார். இதனை ஊடக சுதந்திரத்தின் மீதான சட்டவிரோதத் தாக்குதல் என CNN சாடியுள்ளது.
கரிபியன் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீது தாக்குதல்
கரிபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகக்கப்படும் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்குள் நுழையும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்குகளை ஒடுக்க டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வரும் தீவிர ராணுவ நடவடிக்கையில், இதுவரை 220-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை கடுமையாக கண்டித்த மனித உரிமை அமைப்புகள் இந்தத் தாக்குதல்களை சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் என்று விமர்சித்துள்ளன.
ரியாத் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தினர். இதில் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள அராம்கோ ((Saudi Aramco))நிறுவனத்தின் விமான எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் உள்ள எரிபொருள் தொட்டி தீப்பிடித்து எரிந்தது.

இதனால் அப்பகுதியில் பல அடி உயரத்திற்கு தீப்பிழம்புகளும், அடர்ந்த கரும்புகை மண்டலமும் சூழ்ந்தது. ஏமன் தலைநகர் சனாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved