Also Watch
Read this
மழை வருவதை உணர்ந்தாலே மயில் தோகை விரித்து ஆடும் என்பார்கள். மயிலாக உருவெடுத்த கலைஞர்கள் தோகை விரித்து ஆட, அவர்களை கண்ட கார்மேகம், மழையை வரவேற்கும் மயில்கள் என நினைத்ததோ என்னவோ? தோகை விரித்தாடிய அந்த கலைஞர்கள் மீது, கார்மேகமும் தோகை விரித்து மழையாகக் கொட்டித் தீர்த்தது. பார்வையாளர்களை நெகிழ வைத்த அந்த நாட்டிய நிகழ்ச்சியில் என்ன நடந்தது?

சித்திர நாட்டியம்...
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், பிரிட்ஜ் அகாடமி சார்பில் நடைபெற்ற ‘சித்திர நாட்டியம்’ என்ற பிரம்மாண்ட நாட்டிய நிகழ்ச்சியில் பார்வையாளர்களை நெகிழச் செய்த காட்சிகள், பேசு பொருளாகி உள்ளது.

முனைவர் சுமதி சுந்தர் தலைமையில் நடைபெற்ற சித்திர நாட்டிய நிகழ்ச்சியில், ‘மயூர நடனம்’ மற்றும் ‘மயூர நர்த்தனம்’ கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. நூற்றுக்கணக்கான பரதக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து, தங்கள் உடல் அசைவுகளால் மயில் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கினர்.

மழையைப் பொருட்படுத்தாமல்...
பரதக் கலையின் அசைவுகளில், மயிலின் தோகை விரித்து மயிலென பாவித்து கலைஞர்கள் நடனம் ஆடிய போது, எதிர்பாராத விதமாக வானம் கறுத்து, மழை கொட்டத் தொடங்கியது. ஆனாலும், மழையைப் பொருட்படுத்தாமல் கலை மீதான காதலுடன், சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் 45 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ந்து பரதம் ஆடி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.

மறக்க முடியாத...
கொட்டும் மழையிலும் கலைஞர்களின் கால்கள் தாளம் தவறவில்லை. மழைத் துளிகளும் அவர்களின் நாட்டியத்துக்கு இசை சேர்த்தன. இயற்கையும் இந்த நாட்டிய நிகழ்வோடு கைகோர்த்த நிலையில், கலைஞர்களின் அர்ப்பணிப்பும் பார்வையாளர்களை நெகிழ வைத்தது. மழையையும் வென்று, கலையின் மீது கொண்ட காதலை வெளிப்படுத்திய இந்த நாட்டிய நிகழ்வு, மறக்க முடியாத கலைத் தருணமாக அமைந்ததாக அதில் பங்கேற்ற கலைஞர்கள் மெய்சிலிர்க்க கூறினர்.

உணர்வுகளின் மொழி
மழையை வென்றது நாட்டியம் மட்டுமல்ல; பார்வையாளர்களின் நெஞ்சங்களையும் வென்றது பாரம்பரியமிக்க சதுராட்டக் கலை.

பரதம்... ஒரு நடனம் மட்டுமல்ல... அது உணர்வுகளின் மொழி என்பது இந்த நிகழ்ச்சி மூலம் மெய்ப்பட்டது எனலாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved