Also Watch
Read this
மதுரை அருகே அரசு பள்ளி மாணவன், மற்றொரு மாணவனை ஆசிரியர்கள் முன்பே வயிற்றில் ஓங்கி குத்தியும், எட்டி உதைத்து கீழே தள்ளியும் தாக்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. ஆசிரியரின் அறிவுரையை காது கொடுத்து கேட்காமல், தான் அடிக்கிற அடியில் வாயில் ரத்தம் கொட்டும் என ரவுடிபோன்று பேசும் மாணவர், வகுப்பறை கதவுகளை அடித்து உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டு உள்ளார்.

அரசுப் பள்ளியில்...
மதுரை மாவட்டம், விரகனூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்த மாணவன் மற்றொரு மாணவனை அடிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோதான் ஆசிரியர்கள், பெற்றோர், கல்வி ஆர்வலர்கள் என பலரையும் அதிரவே வைத்துள்ளது.

தான் அடிக்கின்ற அடியில், அவன் வாயில் இருந்து ரத்தம் தெறிக்கும், உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள், என ஆசிரியர்கள் முன்பே சவால் விடுவது போன்று அந்த வீடியோவில் பேசும் மாணவன், சட்டென மற்றொரு மாணவனின் வயிற்றில் ஓங்கி குத்தி உள்ளார்.

ஆசிரியர்கள் தடுத்தும்...
அடிக்க வேண்டாம் என ஆசிரியர்கள் தடுத்தும் கேட்காத அந்த மாணவன் தன்னைவிட வயதில் குறைந்த மற்றொரு மாணவனை ஓடிச்சென்று எட்டி உதைத்து கீழே தள்ளியதோடு, வகுப்பறையில் இரும்புக்கதவை உதைத்தும் எல்லைமீறி உள்ளார். இந்த சம்பவம் நடந்து 3 நாட்களுக்கும் மேலாகிறது எனவும், குறிப்பிட்ட அந்த மாணவனின் பெற்றோர் ஆசிரியர்களிடம் வருத்தம் தெரிவித்ததோடு டிசியை வாங்கி சென்றதாகவும் கூறப்படும் நிலையில் தற்போது தாக்குதல் வீடியோ சமூகவலைதளங்களில் சுற்றி வருகிறது.

கல்வி அலுவலர் விசாரணை
இதுதொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். அதேபோல், வீடியோ யார்மூலம் சமூகவலைதளங்களில் பரவுகிறது என்ற விசாரணையும் நடந்து வருகிறது. அதேபோல், தாக்குதலுக்கு உள்ளான மாணவனுக்கும் குழந்தைகள் மன நல ஆலோசகர் மூலமாக மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved