Also Watch
Read this
By: Fyrose Banu

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவில் இன்று காலை வீடு புகுந்து திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மானாமதுரை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் இவரது வீட்டினுள் ஆட்கள் நடமாட்டம் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். ஒரு நபர் மட்டும் உள்ளே இருந்த நிலையில் மானாமதுரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர், வீட்டில் எப்படி புகுந்தார்? என
விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் போலீசார் பிடிபட்ட நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மானாமதுரையில் கடந்த 14ஆம் தேதி பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த பாரதி (63) என்பவர் வீட்டிலும் உடைகுளம் பகுதி சேர்ந்த ராக்கம்மாள் என்பவரது வீட்டிலும் மாரியம்மன் கோவில் தெரு சேர்ந்த முருகன் என்பவர் வீட்டிலும், அதே தெருவில் ஜெயராமன் என்பவரது வீட்டிலும் அடுத்தடுத்து ஒரே நாள் இரவில் நான்கு வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதில் 25 பவுன் தங்க நகை மற்றும் 30 ஆயிரம் ரொக்கமும் திருடு போனது. 
இச்சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இது பற்றிய எந்த தகவலும் போலீசார் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இன்று பிடிபட்டவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் திருப்புவனத்தில் நடந்து சென்ற சேங்கைச்சாமி என்பவரின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் வளைத்து பிடித்து திருப்புவனம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியின் மகன் என்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறியதால் வழக்கு பதிவு செய்யாமல் அப்படியே விடுவித்து விட்டனர். தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் பிடிபட்டவர்களையும் போலீசார் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என விடுவிப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved