Also Watch
Read this
நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 36 பெண்கள் உள்ளிட்ட 57 பேரில் 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், எஞ்சிய 37 பேரின் நிலை என்ன ஆனது என தெரியாமல் உறவினர்கள் பதற்றத்தில் உள்ளனர்.

நேபாள நாட்டில்...
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, திருச்சி, கடலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 36 பெண்கள் உள்ளிட்ட 57 பேர், கும்பகோணத்தில் இருந்து கடந்த 23ஆம் தேதி இரவு கைலாஷ் யாத்திரை புறப்பட்டனர்.

கடந்த 60 ஆண்டுகாலமாக பயணிகளை யாத்திரைக்கு அனுப்பும் பணியை செய்து வரும் கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற நிறுவனம்தான் இவர்களை 13 நாட்கள் சுற்றுலாவிற்காக அனுப்பி வைத்துள்ளது. இவர்கள் நேபாள நாட்டில் 3 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். நேபாளத்தை சேர்ந்த சாம்ராட் டூரிஸம் அண்ட் டிராவல்ஸ் என்ற சுற்றுலா ஏற்பாட்டாளர் தான் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ரசுவா மாவட்டத்தில் கோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.

கண்ணிமைக்கும் நொடியில்...
வணிக கட்டிடங்கள், வீடுகள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள் என அத்தனையும் நீரில் அடித்துச் செல்ல, சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் உரிமையாளர் சையது சாதிக்கிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. கண்ணிமைக்கும் நொடியில் இயற்கை தங்களை புரட்டிப் போட்டுவிட்டதாகவும், ஒரு வாகனத்தில் உள்ள 20 பேர் மட்டும் பத்திரமாக இருப்பதாகவும், மற்ற 2 வாகனங்களின் நிலையும், அதில் உள்ள 37 பயணிகளின் நிலையும் என்ன ஆனது என்பதே தெரியவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளது.

தொடர்பு எல்லைக்கு அப்பால்...
அதேபோல், தனது தாயின் செல்போன் எண்ணை அழைத்து பார்த்து ஸ்விட்ச் ஆப் என வந்ததால் கண்கலங்கிய ஒருவர் அடுத்து பேச முடியாமல் உடைந்தார்.
தனது மகனையும், மருமகளையும் சுற்றுலா அனுப்பி வைத்துவிட்டு தற்போது பதற்றத்தில் உறைந்துள்ள ஒரு தாய், தன்னிடம் மகன் பேசிக் கொண்டிருந்தபோதே இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

தமிழர்களை மீட்கும் பணியில்...
இதனிடையே, தஞ்சை மாவட்டத்தில் இருந்து மட்டுமே 17 பேர் சுற்றுலா சென்றுள்ளதாகவும், அவர்களின் செல்போன் எண்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் கூறியுள்ள கும்பகோணம் வட்டாட்சியர் பூங்கொடி, வாட்ஸ்அப் காலில்கூட அவர்களை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் கூறினார். அதேபோல் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் நியூஸ் தமிழ் செய்தியாளர் பேசியபோது, தமிழர்களை மீட்கும் பணியை அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.

உறவினர்கள் கோரிக்கை
மத்திய அரசின் தூதரகம் மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், நேபாளத்தில் இருந்து உரிய தகவல் கிடைக்காத 37 பேரை உடனடியாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல்வர் விஜய் அறிக்கை
இதனிடையே, பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும்,

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved