Also Watch
Read this
திபெத் எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட அகோரச் சீற்றம், ஒட்டுமொத்த நாட்டையும் கதிகலங்க வைத்திருக்கிறது. போதே கோஷி நதியில் திடீரென பொங்கி எழுந்த கருப்பு நிற வெள்ளம், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கிராமங்களையும், வர்த்தக நகரங்களையும் விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது.

ஒட்டு மொத்த கிராமங்களையும்...
காலை 9 மணியளவில், நேபாளத்தின் திமுரே, சியாப்ரூ பேசி நகரங்கள் வழக்கம்போல் காலை நேர பரபரப்பில் இயங்கி கொண்டிருந்தது. அப்போது, இமயமலையின் மேலிருந்து பாறை, களிமண்ணுடன் கலந்த, பேரிரைச்சலுடன் சீறிக்கொண்டு வந்த வெள்ளம், பல அடுக்குமாடி கட்டிடங்களை அடித்து சென்றது.

"அய்யோ காப்பாற்றுங்கள்," என கதறிய மக்களின் மரண ஓலம் அடங்குவதற்குள், ஒட்டுமொத்த கிராமங்களையும் விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது போதே கோஷி நதி.

எதுவுமே மிச்சமில்லை...
கடந்த ஆண்டு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட, நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க பிரண்ட்ஷிப் பிரிட்ஜ் பாலம், இந்த ஆக்ரோஷ வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இப்போது தடம் தெரியாமல் போய்விட்டது.

திமுரே சர்வதேச வர்த்தக சந்தை முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கி மயானமாக மாறியிருக்கிறது. 100க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள், சொகுசு கார்கள், சுங்கத்துறை அலுவலகங்கள் என எதுவுமே மிச்சமில்லை. எல்லையில் பாதுகாப்பில் இருந்த 9 ஆயுதப் படை வீரர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.

பெருமழை பெய்யாத நிலையில்...
அதேவேளையில், சர்வதேச விஞ்ஞானிகளையே அதிர்ச்சியில் உறைய வைத்திருப்பது இந்த வெள்ளத்தின் மர்ம பின்னணி தான். ரசுவா பகுதியில் பெருமழை எதுவுமே பெய்யாத நிலையில், இவ்வளவு தண்ணீர் எங்கிருந்து வந்தது என்று நிபுணர்கள் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மண் சரிவு உண்டாகி, தேங்கியிருந்த பிரம்மாண்ட ஏரி உடைந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

105 இந்தியர்கள் மாயம்
நேபாள நாட்டின் ஒட்டுமொத்த நீர்மின் உற்பத்தியில் 12 சதவீதத்தை வழங்கி வந்த திட்டங்கள் அடித்து செல்லப்பட்டதால், 430 மெகாவாட் மின் உற்பத்தி அடியோடு முடங்கியுள்ளது. நாடு முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது வரை 16 சடலங்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், 400க்கும் மேற்பட்டவர்கள் இந்த வெள்ளத்தில் மாயமாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதில் காணாமல் போனவர்களில் 105 பேர் இந்தியர்கள் என சொல்லப்படுகிறது.

பீகார் மாநிலத்தை நோக்கி...
மீட்பு பணிக்காக நேபாள ராணுவம் விரைந்தாலும், வெள்ளத்தின் கோர வேகம் காரணமாக ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாமல் வானத்திலேயே வட்டமடித்தது. இதனிடையே, நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, மக்களைப் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு அழைத்து செல்ல உத்தரவிட்டிருக்கிறார்.

நேபாளத்தின் திரிசூலி நதி வழியே பாயும் இந்த பெருநீர், நேராக பீகாரின் கண்டக், கோசி நதிகளுக்குள் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருப்பதால், நேபாள எல்லையை ஒட்டியுள்ள 8 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட் உத்தரவிடப்பட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved