Also Watch
Read this
நேபாள நாட்டில், பெரு வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அமைச்சர்கள் குழு டெல்லி செல்கிறது. ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் அடங்கிய குழு இன்று இரவு 8 மணிக்கு டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் ஆலோசனை
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் விஜய் தலைமையில் நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தின் காரணமாக, அந்நாட்டுக்கு சுற்றுலா சென்று அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நேபாள நாட்டுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 103 நபர்கள் கைலாஷ் யாத்திரைக்காக இரண்டு குழுக்களாகச் சென்று உள்ளனர். இதில், முதல் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த 54 நபர்களும், புதுச்சேரியைச் சேர்ந்த 3 நபர்களும் என மொத்தம் 57 நபர்களும், இரண்டாவது குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 49 நபர்களும் இடம் பெற்றிருந்தனர்.

அவசர தொலைபேசி எண்கள்
இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உட்பட பலர் காணாமல் போனதாக கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையில், அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிடும் வகையிலும், தமிழகத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாகவும் அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டன. மேலும், இந்த பேரிடரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை, நேபாள நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம், டெல்லியிலுள்ள தமிழக இல்லத்தின் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பயண முகவர் நிறுவனங்களின் உதவியுடன் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆலோசனைக் கூட்டத்தில்...
இந்நிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் விஜய், தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில், டெல்லி தமிழக இல்லத்தின் உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழுவினர் நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்திட உத்தரவிட்டு உள்ளார். மேலும், மீட்கப்பட்டுள்ள 20 தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்திடவும், தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையினைக் கண்டறிந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்திடவும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளார்.

அமைச்சர்கள் தயார்
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், க.தென்னரசு, ர.வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை இயக்குநர் ரெ.சதீஸ் ஆகியோர் டெல்லியிலுள்ள தமிழக இல்லத்தில் முகாமிட்டு, மீட்புப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவர். அதோடு, நேபாளத்திலிருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் உளவியல் ஆலோசனைகளை மருத்துவக் குழுவினர் மூலம் வழங்கிடவும், அவர்களைப் பத்திரமாக தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளார்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved