Also Watch
Read this
நேபாள நாட்டில், பெரு வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை குறித்து சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
தமிழக சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி, தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியது குறித்து எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அப்போது, அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது;
கைலாஷ் யாத்திரைக்கு தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் சென்றிருந்தனர்.

இந்நிலையில், நேபாளத்தில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் 384 சுற்றுலாப் பயணிகளும் சிக்கினர். இதில் 291 பேர் வெளிநாட்டினர். 93 பேர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள். இதுவரை 209 பயணிகள் மீட்கப்பட்டு உள்ளனர். இதில் 75 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

தமிழர்கள் எத்தனை பேர்?
தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் நேபாளம் சென்றிருந்தனர். இவர்களில் கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சென்னை குரோம்பேட்டை மகாதேவ் கைலாஷ் ஏஜென்ஸி மூலம் நேபாளத்துக்கு கைலாஷ் யாத்திரை சென்றவர்களின் விவரம் குறித்து கண்காணித்து வருகிறோம்.

தொடர்பில் இருக்கிறோம்...
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு துணையாக இருக்கும். நேபாள போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் இணைந்து தேடுதல் பணி மேற்கொள்ளப்படுகிறது.

காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்திடம் தொடர்பில் இருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளவும், அவர்களின் குடும்பத்தினர் தொடர்பு கொள்ளவும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன், சட்டசபையில் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved