Also Watch
Read this
தஞ்சாவூர் அருகே திருவிழா கொண்டாட்டத்திற்கு சென்ற 16 வயது சிறுமி, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் 5 பேரை காவல்துறை தட்டித் தூக்கியிருக்கிறது. காதல் என்ற பெயரில் ஒருவன் விரித்த வலையும், அதை தொடர்ந்து சிறுமிக்கு நள்ளிரவில் நடந்த கொடூரமும் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

16 வயது சிறுமி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, புதுக்கோட்டையை சேர்ந்த 24 வயதான சந்தோஷ் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் சாதாரண பேச்சாக தொடங்கிய இந்த பழக்கம், சிறுமியின் அறியாமையை பயன்படுத்தி காதலாக மாறியிருக்கிறது. இந்த சூழலில்தான், சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு அந்த சிறுமி சென்றிருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சந்தோஷ், உன்னைத்தான் திருமணம் செய்துகொள்ள போகிறேன் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி, நயவஞ்சகமாக சிறுமியை திருவிழா கூட்டத்திலிருந்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றிருக்கிறான்.

4 பேர் கொண்ட கும்பல்
சந்தோஷும் அந்த சிறுமியும் தனிமையில் இருந்ததை, அதே பகுதியை சேர்ந்த 20 வயதான அரவிந்த், அவனது 19 வயதான நண்பன் ஆறுமுகம் மற்றும் 17, 15 வயதுடைய 2 சிறுவர்கள் என 4 பேர் கொண்ட கும்பல் நோட்டமிட்டுள்ளது. இருளில் ஓநாய்களாக பாய்ந்த 4 பேரும், சந்தோஷை மிரட்டி அங்கிருந்து விரட்டியடித்து உள்ளனர். காப்பாற்றுவான் என நம்பி வந்த சந்தோஷும் ஓடிப்போக, தனித்து விடப்பட்ட 16 வயது சிறுமியை அந்த 4 பேர் கொண்ட கும்பல் சூழ்ந்துகொண்டு, சிறுமியை மிரட்டி ஈவு, இரக்கமின்றி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. இரக்கமற்ற இந்த கொடூரத்தை அரங்கேற்றிவிட்டு, குற்றுயிராக கிடந்த சிறுமியை அதே இருளில் தவிக்கவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறது அந்த ஈனக் கும்பல்.

பெருமையாகவும், பகட்டாகவும்...
வலியிலும், அதிர்ச்சியிலும் மயங்கி கிடந்த சிறுமி, மயக்கம் தெளிந்து, ரத்தக் கண்ணீரோடு தட்டுத்தடுமாறி நடந்து தனது வீட்டிற்கு சென்றடைந்திருக்கிறார். நடந்த கொடூரத்தை வெளியே சொல்ல முடியாமல், வீட்டுக்குள்ளேயே அழுதுகொண்டு முடங்கி போயிருக்கிறார் அந்த சிறுமி. குற்றம் செய்தவன் நெஞ்சம் குறுகுறுக்கும் என்பார்கள். ஆனால், இந்த 4 பேருக்கும் அப்படி எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல், மறுநாள் காலை, தங்கள் நண்பர்கள் வட்டத்தில் தாங்கள் செய்த கொடூர செயலை, ஏதோ, பெரிய சாதனை செய்ததை போல பெருமையாகவும், பகட்டாகவும் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

புகார் அளித்த கிராம மக்கள்
இவர்கள் சிரித்துப் பேசியதைக் கேட்ட கிராமத்தை சேர்ந்த இருவர், அதிர்ச்சியடைந்து உடனடியாக சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில், சிறுமியின் முகவரியை பெற்ற காவல்துறையினர், சிறுமியிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஆனால், சிறுமி இப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறி மறுத்து இருக்கிறார். இதனால், புகார் அளித்தவர்களை தொடர்புகொண்ட போலீசார், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம், இது சென்சிட்டிவான விஷயம் என்று எச்சரித்துள்ளனர். இருப்பினும், உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியாக இருந்த கிராம மக்கள், பட்டுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரனிடம் இதுகுறித்து புகார் அளித்தனர்.

ஐந்து பேர் கைது
சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த எஸ்.பி. ரவிச்சந்திரன், நேரடியாக சிறுமியின் வீட்டிற்கு சென்று சுமார் 5 மணி நேரம் பொறுமையாகவும், ஆதரவாகவும் விசாரணை நடத்தினார். அதிகாரியின் இந்த அணுகுமுறையால் தைரியம் பெற்ற சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரங்களை அழுதுகொண்டே வாக்குமூலமாக அளித்தார். மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக போலீஸில் புகாரளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறை, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய சந்தோஷ், பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட அரவிந்த், ஆறுமுகம் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 5 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது.

விழிப்புணர்வு தேவை
பெண்களுக்கு எதிராக எத்தகைய அநீதியோ, ஆபத்தோ நேர்ந்தாலும், சமூகத்தின் பார்வைக்கு அஞ்சியோ அல்லது குற்றவாளிகளின் மிரட்டலுக்கு பயந்தோ மௌனம் காக்க கூடாது. நடந்த கொடூரத்தை வெளியில் சொல்ல முடியாமல் மறைப்பது குற்றவாளிகளுக்கு மேலும் தைரியத்தை அளிக்குமே தவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நீதியையும் பெற்று தராது. தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தயங்காமல், தைரியமாக பெற்றவர்களிடமோ அல்லது காவல் துறையினரிடமோ சொல்வது மட்டுமே குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை பெற்றுத்தரும் என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved