Also Watch
Read this
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தினர். பார்ட்டி ஃபண்ட் குறித்தான சட்டவிரோத பணப்பரிமாற்றம், டெண்டர் முறைகேடு தொடர்பாக சென்னை மற்றும் திருச்சியில் 19 இடங்களில் ரெய்டு நடைபெற்றது.

கே.என்.நேரு வீடு முன்பு குவிந்த ஆதரவாளர்கள்
திருச்சி மாவட்டம் தில்லைநகரில் உள்ள கே.என்.நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். கே.என்.நேரு ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு இல்லத்திற்கு அன்பில் மகேஷ் வருகை தந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.

நேரு சகோதரர் அலுவலகத்தில் ரெய்டு
சென்னை ஆர்.ஏ.புரத்தில் கே.என்.நேரு சகோதரர் ரவிச்சந்திரன் அலுவலகத்தில் ரெய்டு நடைபெற்றது. TVH நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

காலை முதல் அதிரடி
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், இன்று செப்டம்பர் 5ஆம் தேதி காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட பத்து இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கே.என்.நேரு வருகை
இதுபோன்று திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்து தற்போது தில்லை நகர் வீட்டிற்கு நேரு வந்துள்ளார். சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களில் கட்சி நிதி கேட்டு மிரட்டி வசூல் செய்ததாக வந்த குற்றச்சாட்டின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அமைச்சராக இருந்தபோது...
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.800 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே.என்.நேரு வீடுகளில் நடந்து வரும் அதிரடி சோதனை அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved