Also Watch
Read this
நீதிமன்ற விசாரணையில் இருக்கும் அமலாக்கத்துறை வழக்கின் மொத்த விவரங்களையும், விதிகளை மீறி, முதல்வர் குற்றச்சாட்டாக சொல்லி இருப்பதாக திமுக கொறடா எ.வ.வேலு குற்றம் சாட்டினார். நடிகர் என்பதால், மிசா குறித்து BODY LANGUAGE உடன், மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தி இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் திமுக கொறடா எ.வ.வேலு, பேசியதாவது;
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, மானியக் கோரிக்கை விவாதங்களில் சட்டப்பேரவையில் பேசும் போது, காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தவெக ஆட்சி அமைந்த பின்னர் 550 குற்றங்கள் நடந்துள்ளன. 200 கொ*கள், 300க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை, 8 காவல் மரணம், 10 ஆணவக் கொ*கள் நடைபெற்றுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

திட்டமிட்டு பேச்சு
இதற்கெல்லாம் முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் பதில் சொல்வார் என எதிர்பார்த்தோம். முதல்வர் 27 நிமிடங்கள் பேசும் வரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தோம். சட்டப்பேரவை விதி 92ன்படி நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கைப் பற்றி பேரவையில் விவாதிக்கக்கூடாது. அப்படி இருக்கையில், முதல்வர் அமலாக்கத் துறை அறிக்கை குறித்து, திட்டமிட்டு பேசினார். சட்டப்படி அப்படி பேசக் கூடாது.

மிசா குறித்து பேச்சு
அதன்பின்னர் மிசா பற்றி பேசினார். அப்போது, அவர் நடிகர் என்பதால் அவருக்கே உரிய பாடி லாங்குவேஜ் எல்லாம் செய்தார். மிசா காலத்தில் யாரும் பேசக்கூடாது, எழுதக் கூடாது என ஜனநாயக கொடுமை இருந்தது. அப்போது ஸ்டாலின், மிசா கொடுமைகளை அனுபவித்தார். ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக முதல்வர் விஜய் உடல்மொழியை செய்தார்.

சர்க்காரியா கமிஷன் குறித்து...
சர்க்காரியா கமிஷன் பற்றி இந்த அவையில் பல முறை விவாதிக்கப்பட்டு, அதற்கு கருணாநிதியே பதில் சொல்லியுள்ளார். கருணாநிதி, முரசொலி மாறன் ஆகியோரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வார்த்தைகளை முதல்வர் விஜய் பயன்படுத்தியுள்ளார் . சர்க்காரியா கமிஷன் விசாரணைக்கு சென்ற எம்ஜிஆர், ’இந்த புகார்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சேலத்து வழக்கறிஞர் கண்ணன் என்னிடத்தில் கொடுத்து கொடுக்கச் சொன்னார், நான் புகார் கொடுத்தேன்,’ என்று கூறினார்.

ஆதாரம் ஒன்றும் இல்லை
சர்க்காரியா கமிஷனிடம் 28 குற்றச்சாட்டு சொல்லப்பட்டது, அந்த கமிஷன் நிறைவடையும் போது இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை எனச் சொல்லப்பட்டது. சர்க்காரியா கமிஷனிடம் ஆதாரம் இருந்திருந்தால், அது நீதிமன்றம் சென்றிருக்கும். ஆனால் ஆதாரம் ஒன்றும் இல்லை.

சபாநாயகர் மறுப்பு
நாங்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் விஜய் பதில் கூறவில்லை. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டப்பாக்குக்கு பதில் கூறி உள்ளார் முதல்வர். இப்போது குற்றம் சொல்கிறார், ஆனால், முரசொலி மாறனுக்கு சுற்றுச்சூழல் ஸ்டாம்ப் வெளியிட தயாநிதி மாறனுடன், அப்போது விஜய்யும் சென்றது ஏன்?. விதிக்கு புறம்பாக அமலாக்கத் துறை விசாரணையில் உள்ள வழக்கு பற்றி முதல்வர் பேசினார், அது தவறு. மிசா ஜனநாயக போராட்டத்தை கொச்சைப்படுத்தும் உடல்மொழியை காட்டுவது தவறு. குற்றச்சாட்டுகளை நிரூபிக்காத சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியது தவறு. எனவே, இவற்றை நீக்க வேண்டும் என்று இன்று பேரவையில் நாங்கள் கோரிக்கை வைத்தோம், சபாநாயகர் மறுத்துவிட்டார்.

ரியல், ரீல்ஸ் ஆட்சி
நாங்கள் ரியல் ஆட்சி நடத்தினோம், இப்போது ரீல்ஸ் ஆட்சி நடத்துகின்றனர். நேற்று முதல்வரின் பேச்சை ரீல்ஸாக போடுகிறார்கள். நேற்று முன் தினம் சத்தியபாமா மாற்று சபாநாயகராக அமர்ந்தார், பெண்கள் மாற்று சபாநாயகர் ஆவது இதுவே முதன்முறை என்று ரீல்ஸ் போட்டார்கள்.

ஆனால், ஏற்கெனவே காங்கிரஸை சேர்ந்த பொன்னம்மாள் அமர்ந்துள்ளார். யசோதா, லீமா ரோஸ் ஆகியோரும் மாற்று சபாநாயகராக இருந்துள்ளனர். ஆதாரமில்லாமல் மூடப்பட்ட சர்க்காரியா கமிஷன் பற்றி பேசி ரீல்ஸ் போடுவதற்காகவே முதல்வர் விஜய் அவ்வாறு பேசியுள்ளார். சபாநாயகர் முன்பு நடுநிலை போல இருந்தார். இப்போது சர்வாதிகார போக்கை கடைப்பிடிக்கிறார்.
இவ்வாறு எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved