Also Watch
Read this
சட்டப்பேரவைத் தலைவர் இருக்கை முன்பாக அமளியில் ஈடுபட்டு, கோஷமிட்ட திமுக எம்எல்ஏக்களை சபைக்காவலர்கள் வெளியேற்றினர்.

தமிழக சட்டப்பேரவையில்...
காவல்துறை, மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்களின் மீது முதல்வர் விஜய், நேற்று செப்.07ஆம் தேதியன்று, பதிலுரை அளித்தார். அப்போது முதல்வர் விஜய், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

முதல்வரின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக்க அனுமதி கோரிய நிலையில், பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார். இதனால் திமுகவினர் நேற்று அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்றும், ’முதல்வர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்,’ என்று கோரி திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்
இதுகுறித்து, திமுக கொறடா எ.வ.வேலு பேசியதாவது;
சட்டப்பேரவைக்கு என மரபுகள் உள்ளன. முதல்வர் கண்ணியமாகவே பேசுவார். ஆனால், முதல்வர் விஜய் அவை மரபை மீறி பேசி உள்ளார். நீதி விசாரணையில் இருப்பதையும் அவையில் பேச அனுமதியில்லை. முதல்வர் விஜய் பேசியபோது நாங்கள் அமைதியாகவே இருந்தோம். அமலாக்கத் துறை அறிக்கையை வாசித்தது அவையை மீறிய செயல்.

ஜனநாயகத்துக்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார் மு.க.ஸ்டாலின். ஏன்,பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திராவிடர் கழக தலைவர் வீரமணி கூட மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார். மிசா சட்டத்தை பற்றி முதல்வர் பேசியதையும் எதிர்க்கிறோம். மாறன் பற்றி முதல்வர் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது. கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்க்காரியா கமிஷனே கூறிவிட்டது. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு தொடர முடியாது என்றும் சர்க்காரியா கமிஷன் கூறிவிட்டது. முதல்வர் விஜய் ஆதாரம் இன்றி பேசிய அனைத்தையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு எ.வ.வேலு வலியுறுத்தினார்.

“அவைக் குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை”
இதனை தொடர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது;
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியபோது திமுகவினர் ஒரு நிமிடம் கூட கவனிக்கவில்லை. மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி முதல்வர் விஜய் குறிப்பிட்டது உண்மையான செய்தியே. அதேபோல் சர்க்காரியா கமிஷன் பற்ற்றியும் பலமுறை சட்டப்பேரவையில் பேசப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் திமுகவினர் எனது அனுமதியின்றி பதாகைகளைக் காட்டியது ஏன்?. நேற்று முதல்வர் விஜய் பேசிய எதையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை.
இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார்.

முற்றுகையிட்ட திமுக எம்எல்ஏக்கள்
இதனைத் தொடர்ந்து திமுகவினர் சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். அதற்கு சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், “சட்டப்பேரவையில் இரண்டு நாட்களாக அமளியில் ஈடுபடும் திமுகவினரை வெளியேற்ற வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.

திமுகவினரை அழைத்த சபாநாயகர்
பின்னர், ’திமுக கொறடா எ.வ. வேலு பேச அனுமதியளிக்கிறேன், அனைவரும் அவரவர் இடத்தில் சென்று அமர வேண்டும்,’ என பேரவைத் தலைவர் கோரிக்கை வைத்தார். எனினும் திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், 'பேரவை விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தினார்.

இதையடுத்து திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றும்படி சபைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து காவலர்கள், திமுகவினரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.

சபாநாயகர் விளக்கம்
அப்போது பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், ’அவையை நடத்த விடாமல் தடுக்க வேண்டும் என்று திமுகவினருக்கு உள்நோக்கம் இருக்கிறது.

அவையின் மாண்பைக் குலைத்ததால் அவர்களை வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது தவறு என்று நான் கருதவில்லை,’ என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து திமுகவினர் இல்லாமல் அவை நடவடிக்கை தொடர்ந்தது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின், கடைசி நாள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved