Also Watch
Read this
சென்னை பட்டினபாக்கத்தில் தலைமை செயலகம் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தி உள்ளார். புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டால் 9 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படுமென கண்டனம் தெரிவித்து உள்ளார்.

திரும்ப பெற வேண்டும்
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியிருப்பதாவது;
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான தமிழக அரசின் முன்மொழிவு தவறானது. மீனவ மக்களின் வாழ்வாதார உரிமை, கடலோரச் சூழலியல், காலநிலைப் பாதிப்பு, பொதுமக்களின் கடற்கரை அணுகல் மற்றும் அரசின் முக்கியமான நிர்வாக நிறுவனத்தின் பாதுகாப்பு ஆகியவை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கும். தமிழ்நாடு அரசு இம்முன்மொழிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

9 மீனவ கிராமங்கள்
முல்லைக்குப்பம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகர் மற்றும் நொச்சிக்குப்பம் உள்ளிட்ட ஒன்பது மீனவ குடியிருப்புகள், முன்மொழியப்பட்ட இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ளன. சுற்றியுள்ள மீனவக் குடியிருப்புகளின் மக்கள், கடலை வெறும் குடியிருப்புப் பகுதியாக மட்டும் சார்ந்திருக்கவில்லை. அது அவர்களின் வாழ்வாதாரத்தின் அடித்தளமாகவும், பொது வளமாகவும் உள்ளது. மீன் பிடித்தல், படகுகளின் இயக்கம், மீன் இறக்குதல், வலை மற்றும் மீன்களை உலர்த்துதல், மீன் விற்பனை, சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி சார்ந்த தொழில்கள் இக்கடலோரப் பகுதியைச் சார்ந்தே நடைபெறுகின்றன.

மேலும் பாதிக்கும்...
இத்தகைய குறுகிய கடலோரப் பகுதியில் மிகப்பெரிய நிர்வாக வளாகம், அதனுடன் சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படுவது, ஏற்கெனவே நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள கடலோரப் பகுதியை மேலும் பாதிக்கும். 1,500க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்கும், பொருளாதார ரீதியாகவும் வாழ்வாதார ரீதியாகவும் பாதிக்கப்படும் நிலைக்கும் தள்ளப்படுவர்.

பொருத்தமற்றது, ஆபத்தானது...
உயர் பாதுகாப்பு கொண்ட அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றத்தின் வருகையால் தடுப்பு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும், முக்கியப் பிரமுகர்களின் வாகனப் போக்குவரத்து, காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியமர்த்தல் போன்றவை தவிர்க்க முடியாததாகும். இதன் விளைவாக, மக்களுக்கு பொதுவாகச் சொந்தமான கடற்கரைப் பகுதி படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாக பாதுகாப்பு வளாகமாக மாறும் அபாயம் உள்ளது. மேலும், காலநிலை அவசர நிலை நிலவும் இன்றைய சூழலில் இத்தகைய இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது பொருத்தமற்றதும் ஆபத்தானதுமாகும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு

ஏற்றுக்கொள்ள முடியாது
நிலையான வளர்ச்சி என்பது பசுமைக் கட்டிடத்தை உருவாக்குவதில் தொடங்குவதில்லை. சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியாக பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் தான் தொடங்குகிறது. மாநிலத்திற்கு நவீன நிர்வாக கட்டமைப்பு தேவைப்படலாம். ஆனால், நிர்வாக நவீன மயமாக்கல் என்ற பெயரில் உணர்திறன் மிக்க கடலோரப் பகுதியை ஆக்கிரமிப்பதும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதும், பொதுமக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதும், ஜனநாயகப் பொது வெளியைச் சுருக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பரிசீலிக்க வேண்டும்
எனவே, தமிழ்நாடு அரசு பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சமூக ரீதியாகப் பொருத்தமான மாற்று இடங்களை அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved