Also Watch
Read this
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் அமைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. கட்டடம் கட்டப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் எங்கு உள்ளது? யாருக்கு சொந்தமான நிலங்கள்? கட்டடம் எப்படி அமையப் போகிறது? உள்ளிட்டவற்றை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

பல தடைகளை தாண்டி...
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, சட்டமன்ற வளாகத்துடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் நவீன வசதிகளுடன் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். தற்போதைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இட நெருக்கடி மற்றும் போதிய வசதிகள் இல்லாததால் நெடுங்காலமாக புதிய தலைமைச் செயலகம் கட்டவேண்டும் என்பது கனவாக இருந்தாலும், அது கைகூடாமலேயே இருந்து வந்தது. பல தடைகளைத் தாண்டி திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஓமந்தூரார் வளாகமும் ஆட்சி மாற்றத்தால் மருத்துவமனையாக மாற்றப்பட்டதும் மீண்டும் மாநில அரசின் நிர்வாக நடவடிக்கைகள் ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே சுருங்கிவிட்டது.

புதிய தலைமைச்செயலகம்...
இந்நிலையில் தான், 1,200 ரூபாய் கோடி செலவில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்ததும் எங்கு அமையப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியது. கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், பட்டினப்பாக்கம் ஆகிய மூன்று இடங்கள் அரசின் பரிசீலனையில் இடம்பெற்றன. இறுதியில் பட்டினப்பாக்கமே தேர்வு செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து வசதி...
மற்ற இரண்டு இடங்களைக் காட்டிலும் பட்டினப்பாக்கத்தில் தான் அரசின் நிலங்கள் ஒருங்கே அமைந்திருப்பதால் அதனை கையகப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்காது. அதுபோல பிற துறைகளில் தடையில்லா சான்றிதழும் எளிதில் கிடைத்துவிடும். எனவே தான் பட்டினப்பாக்கத்தை டிக் அடித்திருக்கிறார் முதலமைச்சர். மேலும் பட்டினப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து வசதிகளும், பேருந்து சேவைகளும் அதிகளவில் உள்ளன. புறநகர் மின்சார ரயில் வசதியும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது, இந்தப் பகுதியில் பொதுப் போக்குவரத்து வசதி மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15 மாடிக் கட்டிடம்...
தலைமைச் செயலகம் கட்டுவதற்காக அடையாளம் காணப்பட்ட பகுதியில் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான 22.89 ஏக்கர் நிலமும், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர் நிலமும், வருவாய்த் துறைக்கு சொந்தமான 1.73 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளன.
15 மாடிகளைக் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டடத்தில் சட்டப்பேரவை அரங்கம், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான அறைகள், துறை வாரியான நிர்வாக அலுவலகங்கள், எதிர்க்கட்சிகளுக்கான அறைகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளன. இதுதவிர உணவகம், மருத்துவ வசதி, தீயணைப்புத்துறை அலுவலகம் மற்றும் வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட உள்ளது.

எதிர்ப்புகள்...
இதற்கிடையே, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு மீனவ கிராம மக்கள் மற்றும் சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் ஏற்கெனவே நெருக்கடியான நிலையில் உள்ள பகுதியில் மேலும் இடநெருக்கடி ஏற்படக்கூடும் என்றும், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமின்றி, புதிய கட்டுமானத் திட்டத்தால் மீனவ கிராமங்கள் அகற்றப்படும் அபாயம் இருப்பதாகவும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும் என்றும் மீனவ மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பணிகள் தொடக்கம்
இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்துடன் கூடிய தலைமைச் செயலகம் கட்டப்படுவதற்கான பூர்வாங்க பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, கட்டடக் கலை நிபுணர்கள் குழு, வரைபடம் தயாரிப்பு, இறுதி கட்டட வடிவமைப்பு மற்றும் ஒப்புதல் குழு என 3 குழுக்களை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved