Also Watch
Read this
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொ* வழக்கில், ஏற்கெனவே 6 தனிப்படை காவலர்கள் கம்பி எண்ணும் நிலையில் சம்பவத்தின்போது பணியில் இருந்த DSP, ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவலர் உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை, கொ* வழக்காக மாற்றி பதிவு செய்யுமாறு மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவை எதிர்பார்க்காத டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

எதிர்பாரா உத்தரவு
என்னதான் வழக்கில் தங்களின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான நேரத்தில் இப்படி ஒரு தீர்ப்பை உயர்மட்டத்தில் உள்ள 4 காக்கிகளுமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் தான்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் என்பவர் மீது கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நிகிதா என்ற பெண், நகை திருட்டு புகார் அளித்தார். அடுத்து, விசாரணை என்ற பெயரில் 24 மணிநேரம் அஜித்குமாரை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்த தனிப்படை போலீசார் மூர்க்கத்தனமாக அடித்து கொ* செய்தனர்.

சிபிஐ விசாரணை
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள், பலரிடம் விசாரணை நடத்தி, மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதனிடையே, தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கொத்தாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழக்கில் 4 போலீசார்
இது ஒருபுறமிருக்க, அஜித்குமார் கொ* சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டது. அதேபோல் அவர்கள் மீது சதி செய்தல், தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கும் பதியப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கானது மதுரை மாவட்ட 5ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி தாமோதரன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 6 தனிப்படை காவலர்களுடன், டிஎஸ்பி சண்முகசுந்தரம், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகியோரும் விசாரணைக்காக ஆஜராகினர்.

சிறையில் அடைப்பு
அப்போது, தாமோதரன், சண்முகசுந்தரம், ரமேஷ்குமார், இளையராஜா ஆகிய 4 பேர் மீதான வழக்கை கொ* வழக்காக பதிவு செய்யக்கோரி வழக்கின் பிரிவை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி. மேலும் அவர்களை வரும் 16ஆம் தேதிவரை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பழைய குற்றவாளிகள் 6 பேரையும் ஒரு வாகனத்தில் அழைத்துச்சென்ற காவல்துறையினர், அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியில் உறைந்த டிஎஸ்பி உள்ளிட்ட 4 பேரும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved