Also Watch
Read this
சென்னை, திருவொற்றியூரில் இளைஞர் படுகொ* செய்யப்பட்ட வழக்கில், 4 பேரை காவல்துறை தட்டி தூக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து ரத்தம் தோய்ந்த பட்டாக்கத்திகளையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், "உன்னை வெட்டி திருச்செந்தூர் கடலில் போடுவேன்," என்று இன்ஸ்பெக்டர் மிரட்டிய மறுநாளே இளைஞர் கொ* செய்யப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

துணை நடிகர் பிரதீப்ராஜ்...
சென்னை, திருவொற்றியூர் மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் 26 வயது இளைஞர் பிரதீப் ராஜ். துணை நடிகராகவும், துறைமுகத்தில் தனியார் ஒப்பந்த ஊழியராகவும் பணியாற்றி வந்த இவர், தனக்கு கொ* மிரட்டல் இருப்பதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்து உள்ளார். ஆனால், புகாரளித்த மறுநாளே பிரதீப் ராஜ் மர்ம கும்பலால் வெட்டி சாய்க்கப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தின் வேர்களை தோண்டிப் பார்த்த போதுதான் பகீர் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

கடன் வாங்கிக் கொடுத்ததால்...
பிரதீப்பின் தாய் ராணி, தன்னிடம் உதவி என்று வந்தவருக்காக, அதே பகுதியை சேர்ந்த நவநீதம் என்பவரிடம் 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கி தந்திருக்கிறார். ஆனால், பணம் வாங்கியவரோ தலைமறைவாகிவிட, ஒட்டுமொத்த வட்டி பாரமும் ராணியின் தலையில் விழுந்தது. ’நீதான் அந்த பணத்தை கட்ட வேண்டும்,’ என்று ராணியை மிரட்ட தொடங்கியுள்ளது நவநீதம் தரப்பு. வட்டியும் முதலுமாக ராணி தரப்பு இதுவரை 18 லட்சம் ரூபாய்க்கும் மேல் செலுத்தியும் கூட, அந்த திமிங்கலங்களின் பசி அடங்கவில்லை.

வட்டிக்கு மேல் வட்டி
பணத்தை கேட்டு, தொடர் தொல்லை கொடுத்ததால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்திருக்கிறது. இதில், கைகலப்பு ஏற்பட்டு பிரதீப் ராஜ் கைது செய்யப்பட்டு சிறைக்கும் சென்றார். ஜாமினில் வெளியே வந்த பிறகும் நச்சரிப்பு நின்றபாடில்லை. தங்களை காப்பாற்ற கோரி சென்னை கமிஷனர் அலுவலகம் வரை சென்று புகாரளித்தது பிரதீப் குடும்பம். ஆனால், வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ரட்சகர்களாக இருக்க வேண்டிய காவல்துறையே வில்லன் அவதாரம் எடுத்தது தான் உச்சகட்ட கொடுமை.

இன்ஸ்பெக்டர் மிரட்டல்
கொ* நடப்பதற்கு முன் தினம், செய்தியாளர்களை சந்தித்த பிரதீப் ராஜ் உதிர்த்த வார்த்தைகள் காக்கிவட்டாரத்தையே உலுக்கியுள்ளது. திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் என்னை ஸ்டேஷனுக்கு கூப்பிட்டு, ’நீ என்ன பெரிய ஆளா? உன்னை வெட்டி திருச்செந்தூர் கடல்ல தூக்கிப் போட்டுருவேன். பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளுவேன்,’ என மிரட்டியதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மறுநாளே சம்பவம்...
காவல்துறையே தன்னை வெட்டி கடலில் போடுவேன் என மிரட்டுகிறது என்று பிரதீப் ராஜ் கதறிய அடுத்த நாளே, அவரை அதே திருவொற்றியூர் வீதியில் வைத்து மர்மகும்பல் ஒன்று வெட்டி சாய்த்தது. ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த பிரதீப் ராஜ் உயிர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருவொற்றியூர் போலீஸார், பிரதீப் ராஜ் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நான்கு பேர் கைது
கொ* நடந்த சில மணி நேரங்களிலேயே உஷாரான தனிப்படை போலீசார், மாதவரம் பகுதியில் பதுங்கியிருந்த நாராயணன் என்கிற நவீன், ஹரிகிருஷ்ணன், ஜாபர், லோகேஷ் ஆகிய 4 பேரை கொத்தாக தூக்கினர். ரத்தம் தோய்ந்த பட்டாக்கத்திகளுடன் பிடிபட்ட அந்த கும்பலிடம் காவல்துறை நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது.

உண்மையான காரணம்
கைது செய்யப்பட்ட நவீன் என்கிற நாராயணன் திமுகவின் 10வது வார்டு இளைஞரணி துணை அமைப்பாளராகவும், படுகொ* செய்யப்பட்ட பிரதீப் ராஜ் அதே பகுதியின் திமுக பாக அமைப்பாளராகவும் வலம் வந்தவர்கள் என்பது அம்பலமானது. கந்துவட்டி விவகாரம் ஒருபுறம் இருந்தாலும், ஒரே வார்டில் இருவருக்குமிடையே இருந்த உட்கட்சிப் பூசலும், ஏரியா ஆதிக்க போட்டியும் தான் இந்த கொ*க்கு உண்மையான காரணம் என உளவுத்துறை மோப்பம் பிடித்திருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved