Also Watch
Read this
திண்டுக்கல் அருகே கொ*வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என பெண் ஒருவரை மிரட்டி வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அரிவாளுடன் தென்னை மரத்தை சுற்றி சுற்றி வந்து போக்கு காட்டியதோடு போலீசாரையும் மிரட்டி உள்ளார். ஆயுதத்தை கீழே போடுமாறு பலமுறை எச்சரித்தும் அரிவாளால் சப் இன்ஸ்பெக்டரை வெட்டியதால், காலில் துப்பாக்கியால் சுட்டு ரவுடியை பிடிக்கும் நிலை உருவானது.

சாட்சி சொன்னா வெட்டுவேன், என்ன தப்பு?
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள சிக்கனம்பட்டியைச் சேர்ந்தவர் 55 வயது ராஜா. வட்டித்தொழில், நிலத்தை வாங்கி விற்கும் தரகர் தொழிலில் ஈடுபட்ட இவர் 2013ம் ஆண்டு நிலம் வாங்கி விற்கும் விவகாரத்தில் சந்திரன், பாண்டி ஆகிய இருவரது கதையை முடித்தார்.

அந்த வழக்கில் சிறையை பார்த்துவிட்டு சில நாட்களில் வெளியே வந்த ராஜா, புரோக்கர் என்பதில் இருந்து புரொமோஷனாகி ரியல் எஸ்டேட் அதிபராக உருவெடுத்தார். அடுத்து, அதே நில விவகாரத்தில் 2021ம் ஆண்டு ராஜபாண்டி என்பவரை தீர்த்துக்கட்டினார். இதில் சாட்சியங்கள் ஸ்ட்ரங்காக இருந்ததால், கீழமை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி ஜாமீனில் வெளியே வந்த ராஜா, என்.கோவில்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கினார்.

நேரடி மிரட்டல்
குறிப்பிட்டு அந்த உறவினர் வீட்டை தேர்ந்தெடுத்து அங்கு ராஜா தங்குவதற்கு காரணம் ராஜபாண்டியின் ஊர் அதுதான். ராஜபாண்டியின் மனைவி பவித்ரா தான் சாட்சி என்பதால் அவரை மிரட்டி ஆயுள் தண்டனையில் தப்பிக்க வேண்டும் என்பதே ராஜாவின் திட்டம். அதன்படியே, பவித்ராவின் வீட்டிற்கே நேரில் சென்ற ராஜா, நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொன்னால் உன் கணவர் கதையை முடித்ததுபோன்று உன் கதையையும் முடித்துவிடுவேன் என மிரட்டி உள்ளார்.

தென்னந்தோப்பில்...
இதற்கு அசராத பவித்ரா, ஆயுள் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும் எனக்கூறியதாக தெரிகிறது. ”2 நாட்கள்தான் டைம்” என கெடு விதித்து ராஜா தொடர் மிரட்டல் விடுக்க, திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார் பவித்ரா. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் ராஜாவை கைது செய்யும் பணியில் இறங்கிய தனிப்படை போலீசாருக்கு ஒரு தென்னந்தோப்பில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

சப் இன்ஸ்பெக்டருக்கு வெட்டு
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் தலைமையிலான போலீசார் சுற்றி வளைக்க, தனது முதுகுக்கு பின்னால் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை தாக்க முயன்றுள்ளார் ராஜா. அரிவாளை கீழே போடுமாறு பலமுறை அருண் பிரசாத் கூறியும் தென்னை மரத்தி சுற்றி சுற்றி வந்து போக்கு காட்டிய ராஜா, தனக்கு எதிராக சாட்சி சொல்லும் நபரை கொ* செய்வதில் என்ன தவறு உள்ளது? என நியாயம் பேசிக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில், தப்பிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த ராஜா, சப் இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத்தின் இடது கையில் அரிவாளால் வெட்டினார்.

காலில் சூடு
அப்போது, தன்னை தற்காத்து கொள்வதற்காக துப்பாக்கியால் ராஜாவின் காலில் அருண் பிரசாத் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த துப்பாக்கிச்சூட்டில் காலில் காயமடைந்த ரவுடி வலியால் கீழே சுருண்டு விழ, அய்யோ அம்மா என கதறிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் போலீசார். அதேபோல், சப் இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத்தும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved