Also Watch
Read this
திமுக தலைவர் என்ற முறையில், தேர்தலில் அடைந்த தோல்விக்கு தாமே பொறுப்பேற்பதாக, மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். திமுக அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரப் போவதாகவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்து உள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று மே 14ஆம் தேதி நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது;
நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும், ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. இப்போது அமைந்திருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் தான் ஆட்சி அமைத்து உள்ளது. திமுக கூட்டணி உடன் சேர்ந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடு தான் ஆட்சி அமைந்து உள்ளது. நமக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லையே தவிர, கணிசமான வாக்கு கிடைத்து இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வந்தால் வெற்றி, தோல்வி சகஜம். ஏற்ற, இறக்கம் இருக்கும். இதுதான் அரசியல். இந்தப் பக்குவம் வேற யாரையும் விட நமக்குத் தான் அதிகம். இது தான், அண்ணா, கருணாநிதி நமக்கு கற்றுக் கொடுத்தப் பக்குவம்.

தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்
கட்சித் தலைவர் என்ற முறையில், இந்த தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதுதான் நிதர்சனம். தோல்வியின்போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானது தான். ஆனால், அது பழியாக இருக்கக் கூடாது. ஆய்வு செய்வது அவசியம் தான், அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக் கூடாது.

மாயாஜால சுனாமி
தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமி என்றால் சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு என்ற அர்த்தத்தில் சொல்றேன். இது, தமிழ்நாட்டின் நலன்களை பாதித்திருக்கும் சுனாமி பேரழிவு. தமிழ்நாட்டு மக்களை இதில் இருந்து, எப்படி மீட்டெடுக்கப் போகிறோம் என்பதைப் பற்றி யோசியுங்கள். எங்கு கோளாறு நடந்தது? எங்கே மெத்தனம் ஏற்பட்டது? என்பது தான் முக்கியம். இதை ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் தனிப்பட்ட பல பிரச்சினை உள்ளது. இவற்றை பரிசீலித்து, ஆய்வு செய்ய வேண்டும். இது ஒரு தேர்தல் சுழல்தானே தவிர, மீண்டெழ முடியாத தோல்வி அல்ல.

ஒற்றுமை இல்லை எனில்...
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மாநாடு, பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டங்கள் இதையெல்லாம் தாண்டிய களமாக சமூக வலைதளங்கள் உருவெடுத்து உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் பல முறை இதனை வலியுறுத்தி உள்ளேன். சட்டமன்றத்தில் முறையான, திறமையான கட்சியாக செயல்பட வேண்டும். நமது அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்றால், கடந்த ஐந்தாண்டுகளில் நாம் உருவாக்கிய திட்டங்களை தொடர்ந்து செயல்பட வைக்க வேண்டும். அனைத்து நிர்வாகிகளிடமும் வலியுறுத்தி பேசுவது, நிர்வாகிகள் ஒற்றுமை தான். கோஷ்டி அரசியலை விட்டு விட்டு, அனைவரையும் அரவணைத்து போக வேண்டும். நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்றால், வெற்றி என்பது சாத்தியம் இல்லை.

கவனம், ஒற்றுமை தேவை
கவனத்துடன், ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அதற்கு முன்னர் நம்மை, சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தோல்விக்கான காரணம் குறித்து, தொகுதி வாரியாக, அனைத்து நிர்வாகிகளிடமும் கருத்து கேட்க வேண்டும். அதற்காக தலைமை சார்பில் கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ஒரு குழுவை அமைக்கப் போகிறேன். தமிழ்நாடு முழுவதும், தொகுதி வாரியாக, எல்லா தரப்பு நிர்வாகிகளையும், இந்த குழு சந்தித்து பேசி அடுத்த 20 நாட்களுக்குள் அறிக்கை அளிப்பார்கள்.

தோல்விக்கு காரணமறிய வெப்சைட்
தொண்டர்கள் வெளிப்படையாக தகவல் கூற தனி ’வெப்சைட்’ அறிவிக்கப்படும். தலைமையால் அமைக்கப்படும் விசாரணைக் குழு, வெப்சைட் மூலமாக கட்சியின் தொண்டர்கள் மற்றும் நம் மேல் அக்கறை கொண்ட பொதுமக்கள் சொல்லும் ஆலோசனைகளையும் வைத்து திமுக அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளேன். இந்த மாற்றம் தான், இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு திமுகவை உயிர்ப்புடன் வைத்திருக்க உள்ளது.

தோல்வி தற்காலிகம் தான்
மாவட்டச் செயலாளர்கள் தான் மாவட்டத்துக்கு முக்கியம். அதை நான் மறுக்கவில்லை. அதற்காக மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே முக்கியம் என ஆகிவிடக் கூடாது. அனைவரும் முக்கியம்தான். ஒருவேளை யாராவது, “என்னால் செயல்பட முடியாது” என நினைத்தால், மனப்பூர்வமாக முன் வந்து விலகிக் கொள்ளலாம். இந்த தோல்வியை நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம். நாம் பல வெற்றிகளுக்குச் சொந்தக்காரர்கள். நமது இந்த தோல்வி தற்காலிகம் தான்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved