Also Watch
Read this
By: Fyrose Banu

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கிளியனுார் அருகே பைபாஸ் சாலையில் சவுக்கு கட்டைகளை ஏற்றி சென்ற லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டிரைவர் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். வானுார் அடுத்த துருவை கிராமத்தில் விவசாய நிலத்தில் வெட்டப்பட்ட சவுக்கை கம்பங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புதுச்சேரி–திண்டிவனம் பைபாஸ் சாலை வழியாக ஈரோட்டிற்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை உளுந்துார்பேட்டை அடுத்த செஞ்குறிச்சியை சேர்ந்த சந்தோஷ், 26; என்பவர் ஓட்டிச்சென்றார். இந்த லாரி, கிளியனுார் கலால் சோதனைச்சாவடி அருகே வளைவில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில், லாரிக்குள் இருந்த சவுக்கை கம்பங்கள், உருண்டு ஓடி சாலையில் சிதறி கிடந்தது. விபத்தில், ஓட்டுநர் சந்தோஷ், அதே பகுதியை சேர்ந்த குணசேகர், 26; ஜெயக்குமார், 19; சரண்ராஜ், 22; சாய் விஸ்வநாதன், 23; ஹரிஹரன், 23; ஆகிய ஆறு பேர் காயமடைந்தனர். தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் காயமடைந்த ஆறு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடுரோட்டில் கவிழ்ந்த லாரியை, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் போலீசார் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் போலீசார் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கிளியனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved